சிஏஏவுக்கு எதிராக திரண்ட இஸ்லாமியர்கள்.. தேசிய கொடியுடன் பேரணி.. குலுங்கியது புதுவை
Recommended Video
புதுச்சேரி: குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி புதுச்சேரியில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கையில் தேசிய கொடி ஏந்தியவாறு கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர். சுதேசி மில் அருகே புறப்பட்ட பேரணி அண்ணாசாலை வழியாக தலைமை தபால்நிலையம் சென்றடைந்தது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்டங்கள், வன்முறையாக மாறியதால், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா உள்ளிட்ட எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என அந்தந்த மாநில முதலமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இப்படி குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அச்சட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இது போராட்டக்காரர்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.
இதனிடையே புதுச்சேரியிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமியை பொறுத்தவரை, புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியே கவிழ்ந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பகோரி புதுச்சேரியில் இன்று அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்.
சுதேசி மில் அருகே புறப்பட்ட பேரணியானது, மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி வழியாக இறுதியாக தலைமை தபால்நிலையம் சென்றடைந்தது. பின்னர் தலைமை தபால் எதிரே ஒன்று திரண்ட அனைவரும், குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறக்கோரியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர். இஸ்லாமியர்களின் பேரணி காரணமாக நகரப் பகுதியில் ஆங்காங்கே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.