தம்பி கொலை.. பழிக்குப் பழி.. ஸ்கெட்ச் போட்ட அண்ணன்.. தெறித்து ஓடிய ரவுடிகள்.. புதுவையில் பரபரப்பு
Recommended Video
புதுச்சேரி: தம்பியை கொலை செய்தவரை பழிக்கு பழி வாங்கும் வகையில் நடைபெற்ற கொலை முயற்சியில், சினிமா பட பாணியில் உயிரை பாதுகாத்துக்கொள்ள பாலத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய மூன்று ரவுடிகளால் புதுச்சேரியே பரபரப்பாகிப் போனது.
கடலூர் மாவட்டம் ஓட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்பிரசாத். இவரை கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி முள்ளோடை பகுதியில் உள்ள மதுபானக் கடையில் ஏற்பட்ட தகராறில் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த அருள், சுந்தர், பாலகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தனர். இதில் 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை தற்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று விசாரணைக்காக புதுச்சேரி நீதிமன்றத்திற்கு அருள், சுந்தர், பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் புதுச்சேரிக்கு வந்தனர். விசாரணை முடிந்து அவர்கள் 3 பேரும் தங்களது நண்பர்கள் 3 பேருடன் 3 இருசக்கர வாகனத்தில் கடலூருக்கு புறப்பட்டனர்.
அப்போது அரியாங்குப்பம் பாலத்தின் அருகே வந்தபோது, இறந்துபோன ராம்பிரசாத்தின் அண்ணன் மகேஷ் என்பவர் 3 பைக்கில் தனது நண்பர்கள் 5 பேருடன் அவர்களை வழிமறித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதிலிருந்து தப்பிக்க அவர்கள் மூவரும் மேம்பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தனர்.
பின்னர் அந்த கும்பல் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பிசென்றனர். இதை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் சினிமா பட பாணியில் நடைபெற்ற கொலை முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.