ஆளுநர் கருத்தே சொல்லக்கூடாதா? “எனக்கு கவலை இல்லை”.. விசிக ஆர்ப்பாட்டத்தால் டென்ஷனான தமிழிசை!
புதுச்சேரி : தமிழ்நாட்டு எம்.பிக்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கவில்லை. போராட்டம் நடத்தாமல் ஆக்கப்பூர்வமாக செயல்படலாம் என்றுதான் கூறினேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என விசிக அறிவித்துள்ளது குறித்து பேச விரும்பவில்லை என்று தமிழிசை காட்டமாக பதிலளித்தார்.
புதுச்சேரி ஜிப்மரில் கட்டணம் நிர்ணயிப்பதை நிறுத்தக்கோரி விசிக எம்.பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் போராட்டம் நடத்தியதையடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விசிக அறிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "ஜிப்மரில் புதிய பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏழைகளைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கட்டணம் வசூலிக்க ஜிப்மர் முடிவு எடுத்தவுடன், அது அதிகமாக இருப்பதால் குறைக்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்புகொண்டு பேசினேன். இதையடுத்து அது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு நிதி ஜிப்மருக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
எம்.பிக்கள், ஜிப்மர் இயக்குநரை நேரடியாக சந்தித்து கேட்கலாம். நான் மருத்துவமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் வேண்டாம் என்றுதான் தெரிவித்தேன். மக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என்பதுதான் எனது கருத்து. ஆளுநர் கருத்தே சொல்லக்கூடாதா? அதற்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.
மக்களிடம் உண்டியல் குலுக்கி சிறப்பு விமானத்தில் என்னை ஏற்றி அனுப்புவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். அதுவும் மக்களிடத்தில் இருந்துதான் பெறவேண்டுமா? நீங்கள் சேர்த்து வைத்ததில் வாங்கினாலும், அதில் நான் ஏற மாட்டேன். நான் பொதுமக்களுடன்தான் விமானத்தில் பயணிக்கிறேன். சிறப்பு விமானம் பயன்படுத்துவதில்லை. என்னை அனுப்புவது குறித்து நாராயணசாமி கவலைப்படவேண்டாம்.
மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமலும் இருக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ரகம் நான். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். நான் என் பணியைச் செய்கிறேன். கொரோனா நேரத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவமனைக்கு சென்று வரவில்லை. நான் சென்று வந்தேன். போராட்டம் நடத்தாமல் ஆக்கப்பூர்வமாக செயல்படலாம். தமிழ்நாட்டில் இருப்போருக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கவில்லை.
ஜிப்மர் மருந்துகள் தட்டுப்பாடு இருந்ததால் உடனே வாங்க ஏற்பாடு நடக்கிறது. ஜிப்மரில் மக்கள் மருந்துகம் அமைக்க டெண்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிப்மருக்கு வக்காலத்து வாங்கவில்லை. சிடி ஸ்கேனுக்கு 1990ம் ஆண்டில் இருந்து பணம் வாங்குகிறார்கள். பொதுமக்கள் மீது அதிக அக்கறை எங்களுக்கு உள்ளது. முதல்வர் கோரிக்கைகளை வைத்தாலும், கையெழுத்து போடுவதில்லை என்று கூறுவது தவறு. அறிவிப்புகள் வருவதை நீங்கள் பார்க்கலாம். எல்லாமல் சரியாக நடக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications