புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் வழிபாடு..
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
Recommended Video
கொரோனா தொற்று பரவலை தடுக்க 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று முதல் மத வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் மத வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு முடிவு செய்தது.

மதவழிபாடு இடங்களுக்கு செல்லும்போது பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். கை, கால்களை சோப்பு போட்டு நன்கு சுத்தமாக கழுவிய பின்னரே தரிசனத்துக்கு வர வேண்டும். சளி, இருமல், காய்ச்சல், உடல் நலக் குறைவு உள்ளோர், 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் பக்தர்களின் நலன் கருதி வழிபாட்டு தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

மூலவர் மற்றும் உற்சவர் தரிசனத்துக்கு மட்டுமே கோயில்களின் நடை திறக்கப்படுகிறது. தீபாராதனை, அர்ச்சனை, அபிஷேகம், அன்னதானம், இதர பூஜைகள், உற்சவங்கள், திருமணம் ஆகியவை நடக்காது. நான்கு கால பூஜைகள் பக்தர்கள் தரிசனத்துக்கு இடையூறின்றி நடத்தப்படும். பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், சந்தனம், பூ, தீர்த்தம், பிரசாதம் ஆகியவை வழங்கப்பட மாட்டாது. தரிசனத்துக்கு பிறகு கோயில் உட்புறமோ, வெளியிலோ 5 பேருக்கு மேல் ஒன்றாக கூடி பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். கோயிலில் யாராவது நோயில் பாதிக்கப்பட்டிருப்பதாக அச்சமாக உணர்ந்தால் உடனே தகவல் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படிருந்தது.

இந்நிலையில் அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, உலகப்புகழ்பெற்ற காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கோயில்கள் இன்று திறக்கப்பட்டது. அதே போன்று காரைக்காலில் உள்ள பெரிய பள்ளி வாசல் உள்ளிட்ட அனைத்து மசூதிகளும் இன்று அதிகாலையிலே திறக்கப்பட்டது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக ஐந்து கால பூஜையின், முதல் கால பூஜையை பக்தர்கள் கோயிலுக்குள் வருவதற்குள் முடித்துக்கொண்டனர். இதன் பின்பு கோயிலின் வாசலில் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் கைகளை கழுவியப் பின்பு, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பதிவு செய்த பின்பு தனிமனித இடைவெளி விட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.

மேலும் மூலவர் மற்றும் உற்சவரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். பக்தர்கள் முன்பு அர்ச்சகர்கள் எந்தவித அர்ச்சனையோ, அபிஷேக தீபாராதனையும் நடத்தவில்லை. மேலும் விபூதி உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்படவில்லை. இதேபோன்று காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து மசூதிகளிலும் இன்று அதிகாலை தொழுகை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தனி மனித இடைவெளியுடன் முககவசம், அணிந்தபடி தொழுகையில் ஈடுபட்டனர். வழிபாட்டு தளங்களில் பின்பற்ற வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பக்தர்களும், வழிபாட்டு தள நிர்வாகத்தினரும் கடைபிடிக்கின்றார்களா என்பதை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து மத வழிபாட்டுதளங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு திறக்கப்பட்ட அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்கள் ஆர்வமுடன் வழிபட்டு, கொடிய நோயான கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கவும், நோய் முற்றிலுமாக அழிந்து செல்லவும் பிரார்த்தனை செய்தார்கள்.

இதனிடையே மால்களும் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன. அதேபோல 50 சதவீத இருக்கைகளுடன் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications