நூதன முறையில் லேப்டாப் திருட்டு.. புதுச்சேரியில் கைவரிசை காட்டி சிக்கிய திருடன்
புதுச்சேரி: புதுச்சேரி பேருந்து நிலையத்தில் லேப் டாப்களை திருடியவரை, பாதிக்கப்பட்டவர்கள் சுற்றிவளைத்து, போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணகுமார். இவர் சென்னை செல்வதற்காக நேற்று மாலை புதுச்சேரி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்தார். பின்னர், சென்னை செல்லும் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தார்.

அப்போது, இருக்கையில் தனது லேப்டாப்பை வைத்துவிட்டு கீழே இறங்கினார். பின்னர், சிறிதுநேரம் கழித்து மீண்டும் பேருந்தில் தனது இருக்கைக்கு சென்ற போது லேப்டாப் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோன்று மேலும் இருவர் தங்களது லேப்டாப்பை தேடிக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் மூன்று பேரும் பேருந்துநிலையம் முழுவதும் தேடியதில், சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் தான் லேப்- டாப்புகளை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது.

திருச்சியைச் சேர்ந்த தனது நண்பர்களான செல்வகுமார், முத்துக்குமார் ஆகியோருடன் சேர்ந்து தொடர்ந்து பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி லேப்டாப்புகளை திருடி வந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். பின்னர், அவரிடமிருந்து 6 லட்சம் மதிப்புள்ள 19 லேப்டாப்புகளை பறிமுதல் செய்த போலீசார் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், செந்திலின் நண்பர்களான செல்வகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications