கொரோனாவிலும் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்.. இளம்பெண் மீட்பு.. 2 பேர் கைது!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வீட்டில் விபச்சார தொழில் நடத்திவந்த பெண் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் அதிகளவில் நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பப்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், சொகுசு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் புதுச்சேரியில் விபச்சார தொழில் கொடிகட்டி பறக்கிறது.
இந்நிலையில் புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் அங்கு தமிழகப் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணை வைத்து விபச்சார தொழில் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரும், அவரது மனைவியின் அக்காவும் சேர்ந்து விபச்சார தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மீட்டு, பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில், விபச்சார தொழிலில் அந்தோணி என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு அமலில் உள்ளபோதும், புதுச்சேரியில் விபச்சாரம் தங்குதடையின்றி நடைபெற்று வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது