வீடு தேடி வந்து முதியோருக்கு தடுப்பூசி போடப்படும்.. புதுச்சேரியில் 25-ம் தேதி தடுப்பூசி திருவிழா
புதுச்சேரியில் வரும் 25-ம் தேதி தடுப்பூசி திருவிழா நடக்க உள்ளது
புதுச்சேரி: புதுச்சேரியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வரும் 25-ம் தேதி தடுப்பூசி திருவிழா என்றும், முதியோருக்கு இல்லம் தேடி வந்து போடப்படும் என்றும் சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.. விடாமுயற்சி மற்றும் தீவிர நடவடிக்கை காரணமாக, தடுப்பூசி எண்ணிக்கை இன்று 100 கோடியை கடந்துள்ளது.
கொலை, போக்சோ வழக்குகள், குற்றச்செயல்...6 வழக்கறிஞர்களுக்கு தடை...பார்கவுன்சில் அதிரடி
இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமாகும்.. அதேபோல, ஜப்பானை விட 5 மடங்கு அதிகம்.. ஜெர்மனியை விட 9 மடங்கு அதிகம்.. பிரான்சில் போடப்பட்ட தடுப்பூசிகளின் அளவை விட 10 மடங்கு அதிகம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இலக்கு
100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டியதற்காக பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்திய அரசுக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல, புதுச்சேரி மாநில முதல்வர் தமிழிசை சவுந்தராஜனும் இதை பெருமிதமாக கூறி, மற்ற நாடுகளால் இப்படி சாதனை செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அறிவிப்பு
இந்நிலையில், புதுச்சேரி அரசு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புதுச்சேரியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வரும் 25-ம் தேதி தடுப்பூசி திருவிழா என்றும், முதியோருக்கு இல்லம் தேடி வந்து போடப்படும் என்றும் அறிவித்துள்ளது.. இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
திருவிழா
கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க புதுவை அரசு சுகாதாரத்துறை மூலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 25-ந் தேதி மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது கவர்னரின் அறிவுறுத்தலின்படி 'நாங்க போட்டுக்கிட்டோம், நீங்க போட்டுக்கிட்டீங்களா' என்ற கருவுடன் நடைபெறும்.
தொற்று நோய்
நாட்டில் இதுவரை கிட்டத்தட்ட 100 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தற்போதைய நிலவரத்தின்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மட்டுமே நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மேலும் தீவிர சிகிச்சை பெறும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே ஆவர். புதுச்சேரி மாநிலத்தில் சராசரியாக 70 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியை எடுத்துள்ளனர். இன்னும் 30 சதவீத நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை.
முதியோர்கள்
100 சதவீதம் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் தான் இந்த கொடிய நோயில் இருந்து நாம் மீண்டும் இயல்பு நிலைக்கு செல்ல முடியும். அதனால் இந்த தடுப்பூசி திருவிழாவில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று நம் புதுவை மாநிலத்தை 100 சதவீதம் தடுப்பூசி பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். மேலும் வாகன வசதி இல்லாதோரும், முதியோர்களும், தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமாயின் எங்களின் 24 மணிநேர 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் உங்கள் இல்லம் தேடிவந்து தடுப்பூசி போடப்படும்.
முககவசம்
தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் யாருக்கும் இதுவரை ஒவ்வாமை போன்ற எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. வரும் 25-ந்தேதி நடைபெறும் தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாது முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி சோப்புபோட்டு கைகளை சுத்தம் செய்வது போன்ற பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.