புதுச்சேரியில் மதுபான கடைகள் கண்டிப்பாக திறக்கப்படும்: நாரயணசாமி
புதுச்சேரி : புதுச்சேரியில் விரைவில் மதுக்கடைகள் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கொரோனா தொற்று உயருகிறது. வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு பேர் வருகின்றனர் என்ற விவரத்தை மத்திய அரசு நமக்கு கொடுப்பதில்லை.
சென்னையில் அவர்கள் விமானம் மூலம் வந்திறங்கும் விவரத்தை தமிழகமும் நமக்கு தருவதில்லை. இது நமக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆகவே தான் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மூலமாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மற்றும் சென்னை விமான நிலையத்துக்கும் கடிதம் எழுதி, புதுச்சேரியை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து விமானத்தல் வருகிறார்கள் என்ற விவரத்தை எங்களோடு பகிர வேண்டும். அப்போது தான் முறையாக அவர்களுக்கு பரிசோதனை செய்ய முடியும். வெளிநாட்டில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்துவதை கடைபிடிக்க எங்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளேன்.
37 நாட்களுக்குப் பின்னர் ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
புதுவை சிவப்பு மண்டலமா?
புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியுள்ளதாக தவறான தகவல் பரவுகிறது. புதுச்சேரியை பொருத்தவரையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலம் என்று பிரிக்கின்ற அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. எண்ணிக்கை உயர காரணமே வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் தான். புதுச்சேரி மாநிலத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பெரிய அளவில் இல்லை. ஒரு சிலருக்குத்தான் உள்ளது. அதுவும் பலரோடு தொடர்பில் இருப்பதால் வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆகவே நம்முடைய மருத்துவர்கள், காவல்துறையினர் தமிழகத்தில் இருந்து வருவோரை பரிசோதனை செய்து, முறையான அனுமதி பெற்று வருகின்றனரா? என்று கண்காணிக்க வேண்டும்.
மதுகடை திறப்பு பிரச்சனை என்ன?
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எல்லைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது சிலர் போலியான அனுமதி சீட்டு வைத்திருந்தது தெரியவந்தது. ஆகவே காவல்துறையினர் முனைப்புடன் இருக்க வேண்டும். எல்லையை கட்டுப்படுத்தினால் தான் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். புதுச்சேரியில் வருவாயை பெருக்க வேண்டும். அதற்காக மதுக்கடைகளை திறந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து மதுவிற்பனை செய்ய வேண்டும் என்று எங்கள் அமைச்சரவையில் முடிவு செய்து துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பினோம். அதற்கு தமிழகப் பகுதிகளில் விற்கின்ற விலைக்கு மதுவை விற்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளதன் காரணமாக அதனை மறுபரிசீலனை செய்து அனுப்பியுள்ளோம்.
மதுகடைகள் விரைவில் திறப்பு
இன்னும் அந்த பிரச்சனை தீராத நிலையில் இருக்கிறது. அதற்கான முடிவை எங்கள் விரைவில் எடுக்கும். வெகு விரைவில் மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும். இதற்கிடையில் காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கக்கூடாது எனவும், என்மீது தனிப்பட்ட முறையில் தவறான குற்றச்சாட்டை கூறி மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு நீதிபதிகள் தெளிவாக மதுக்கடைகளை பொருத்தவரையில் அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது. சிபிஐ விசாரணைக்கும் மதுக்கடைகள் திறப்பதற்கும் சம்மந்தம் கிடையாது. தற்காலிகமாக மதுக்கடைகளின் உரிமம் தடை செய்யப்பட்டிருந்தால் அவற்றை திறக்கக்கூடாது. ஆனாலும் கலால்துறையானது விதிகளுக்கு உட்பட்டு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அவர்கள் எடுக்க அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளனர்.
மத்திய அரசின் நிதி தேவை
அதுமட்டுமின்றி என்மீது தனிப்பட்ட முறையில் கூறிய குற்றச்சாட்டுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இதுபோன்று உள்நோக்கத்தோடு, புதுச்சேரி மாநிலத்துக்கு வரும் வருவாயை தடுப்பது மட்டுமின்றி, வேண்டுமென்றே என் மீதும், புதுச்சேரி அரசின் மீதும் கலங்கம் ஏற்படுத்த ஒருசிலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் யார் என்றும், அவர்களின் பின்னணி என்னவென்றும் புதுச்சேரி மக்களுக்கு தெரியும். தேவைப்பட்டால் நீதிமன்ற உத்தரவு வந்தபிறகு, என்மீது கூறப்பட்ட ஆதாரமற்ற புகார்கள் கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். மத்திய அரசு நம்முடைய மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுள்ளோம். கடந்த 2 மாதங்களாக கடைகள், தொழிற்சாலைகள் மூடிக்கிடந்தன. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பிரதமர், உள்துறை அமைச்சருக்கு நான் கடிதம் நேற்று கடிதம் எழுதியுள்ளேன். அதில் எங்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி ரூ.410 கோடி வரவில்லை. இரண்டு மாதம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு சுமார் ரூ.800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பீட்டை கொடுக்க வேண்டும்.
மத்திய அரசிடம் எதிர்பார்க்கும் ரூ.995 கோடி நிதி
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவை தடுத்து நிறுத்தவும், அதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் மத்திய அரசு ரூ.995 கோடி கொடுக்க வேண்டும். 7 வது ஊதியக்குழு நிதி ரூ.2,800 கோடி கொடுக்க வேண்டும். டெல்லியில் காவல்துறைக்கு கொடுக்கும் ஊதியம், ஓய்வூதியர்கள் நிதி போன்றவற்றை எங்களுக்கு கொடுக்க வேண்டும், புதுச்சேரியை 15 வது நிதிக்கமிஷனில் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளேன். அவர்கள் செவிச்சாய்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருபுறம் புதுச்சேரி மாநிலத்தின் நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டும் போது அதற்கு பல முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அதனை தகர்த்தெரியும் வேலையை செய்து வருகிறோம். புதுச்சேரி அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது மட்டுமல்லாமல், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற நிதி தேவைப்படுகிறது. அதற்கான பணியையும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என நாராயணசாமி தெரிவித்தார்.