உச்சகட்ட பரபரப்பில் வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ டெஸ்ட்! இன்று ரத்த மாதிரி சேகரிப்பு
புதுக்கோட்டை: வேங்கையவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், இறையூர் மற்றும் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ சோதனைக்காக இன்று ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 4 சிறுவர்களிடம் இன்று இரத்தமாதிரி சேகரிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. பின்னர் சிபிசிஐடிக்கு இந்த வழக்கை மாற்றி விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏற்ற சிபிசிஐடி, வேங்கைவயல், இறையூர், கீழ முத்துக்காடு ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலரை அடையாளம் கண்டனர். இதற்கிடையே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முதற்கட்டமாக 11 நபர்கள் மீது டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி பெற்றது சிபிசிஐடி. ஆனால் அவர்களில் மூன்று பேர் மட்டுமே புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் டிஎன்ஏ பரிசோதனை செய்து கொண்டனர். பயிற்சி காவலர் முரளி ராஜா, இறையூர் மற்றும் கீழ முத்துக்காட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் என மூவர் மட்டுமே டிஎன்ஏ பரிசோதனைக்கு ஒத்துழைத்தனர்.
மற்றவர்களுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க ஆஜராகவில்லை. அறிவியல் பூர்வமாக சாட்சிகளை நிரூபிக்க வேண்டியுள்ளதால் டி.என்.ஏ பரிசோதனை அவசியம் என்று சிபிசிஐடி உறுதியாக இருந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களிடமும் ரத்த மாதிரி பெறப்பட்டது.
இதுவரை காவலர் ஒருவர் உட்பட 21 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் அதிகமானோரை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுவர்கள் 4 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரி, மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 17ஆம் தேதி விசாரித்த நீதிபதி எஸ்.ஜெயந்தி, 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவித் தொடர்ந்து, இறையூர் மற்றும் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ சோதனைக்காக இன்று ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்தமாதிரி எடுக்கப்படுகிறது. பின்னர் சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்படும்.












Click it and Unblock the Notifications