அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்... சமாதானம் செய்த மனைவி..!
புதுக்கோட்டை: அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி ஒருவர் கண்ணாடி கதவை உடைத்துக்கொண்டு தப்பியோடியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கியை சேர்ந்த கண்ணன் என்பவர் பணி நிமித்தமாக காரைக்குடிக்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கொரோனா சோதனை செய்திருக்கிறார். அதன் முடிவு வருவதற்குள் சொந்த ஊரான அறந்தாங்கிக்கு அவர் வந்துவிட்டார்.

இந்நிலையில் கொரோனா பாசிட்டிவ் என சோதனை முடிவு வந்ததை தொடர்ந்து அறந்தாங்கியில் உள்ள சுகாதார பணியாளர்கள் கண்ணனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அங்கு கொரோனா வார்டில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் கொரோனா வார்டில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கதவை உடைத்துக்கொண்டு தப்பியோடிருக்கிறார். இந்த நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு காவல்துறை கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து கவச உடையுடன் டூவிலரில் சென்று கண்ணனை மடக்கிப்பிடித்த போலீஸ், அவரது மனைவியை நிகழ்விடத்துக்கு வரவழைத்து சிகிச்சையின் அவசியத்தை எடுத்துக்கூறியிருக்கிறது.
போலீஸாரும், தனது மனைவியும் சமாதானம் செய்ததை அடுத்து அதனை ஏற்றுக்கொண்ட கண்ணன் அரசு மருத்துவமனை வேண்டாம் எனக் கூறி தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்.
கொரோனாவை ஒழிப்பதற்கு முன் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையையும், சிகிச்சையின் அவசியத்தையும் சுகாதாரத்துறை எடுத்துரைக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications