காங்கிரஸ்.. வேண்டவே வேண்டாம்.. அறந்தாங்கியில் கொந்தளித்த திமுகவினர்.. தீக்குளிக்க முயற்சி
புதுக்கோட்டை: அறந்தாங்கி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபை தொகுதி தற்போது அதிமுக வசம் உள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.டி.ராமச்சந்திரன் போட்டியிட்டார். எனவே அதிமுகவுக்கு எளிதான வெற்றி கிட்டியது.
இந்த முறையும் அறந்தாங்கி சட்டசபை தொகுதியை திமுக கூட்டணியில் உள்ள தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது. எனவே கொந்தளித்துவிட்டனர் திமுகவினர்.

கோஷங்கள்
எதிர்ப்பு தெரிவித்து அறந்தாங்கியில் ஊர்வலமாக சென்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக தொண்டர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீக்குளிக்க முயற்சி
உடனே அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு நடக்காமல் தடுத்தனர். இந்த தேர்தலில் அறந்தாங்கி தொகுதி திமுகவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பியதால் காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

தேசிய கட்சிகள்
கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க கூடாது என்று இன்று அதிமுக தொண்டர்களில் ஒரு பகுதியினர் போராட்டம் நடத்தினர். திமுக கூட்டணியில் அறந்தாங்கியை, காங்கிரசுக்கு ஒதுக்க கூடாது என பிரச்சினை வெடித்துள்ளது.

காங்கிரஸ் நிலைமை
இரு தேசிய கட்சிகளுக்கும் இரு திராவிட கட்சிகளும் கணிசமான தொகுதியை ஒதுக்கியுள்ளன. எனவேதான் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. கடந்த முறை திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது.












Click it and Unblock the Notifications