ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்து கொண்டு நாக்கையா வழிக்க முடியும்?- மீண்டும் எகிறும் கருணாஸ்
புதுக்கோட்டை: ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்துக் கொண்டு நாக்கையா வழிக்க முடியும் என்று கருணாஸ் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரியை தரக்குறைவாக பேசியதாக கருணாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கூவத்தூரில் நடந்த ரகசியங்களை வெளியே சொல்வேன் என அதிமுக அரசை மிரட்டி வருகிறார்.
ஆனால் தமிழக அரசோ கூவத்தூரில் ஒரு ரகசியமும் இல்லை. நாங்கள் இட்லி சாப்பிட்டோம், சட்னி சாப்பிட்டோம். அதுதான் ரகசியம் என தமிழக அரசு கூறி வருகிறது.

நோட்டீஸ்
இவருக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர் கருணாஸ். எனவே கட்சியின் விதியை மீறி தினகரனுடன் உறவு கொண்டாடுவது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் திட்டமிட்டுள்ளார்.

நோட்டீஸ்
இந்நிலையில் இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில் எம்எல்ஏ பதவியே வேண்டாம் என இருக்கிறேன். எனவே சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினால் என்ன? அனுப்பாட்டி என்ன?

நாக்கா வழிக்கிறது
என் தொகுதி மக்களுக்கு தமிழக அரசு எந்த நலத்திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. பிறகு எதற்காக இந்த பதவி வகிக்க வேண்டும். மாதமானால் நீங்கள் சம்பளமாக கொடுக்கும் ரூ.1 லட்சத்தை வாங்கிக் கொண்டு நான் நாக்கா வழிக்க முடியும்?

வசூல் செய்து கொடுக்கனுமா
அந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? சம்பளத்துக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. அதுபோல் தொகுதியில் ஆயா வேலையிலிருந்து தலையாரி வேலை வரைக்கும் வசூல் செய்து கொடுக்கனும்னா நான் என்ன புரோக்கர் வேலைக்கா வந்தேன். தமிழ்நாட்டில் நான் எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications