ராத்திரி 11 மணிக்கு மேல் விஜயபாஸ்கருக்கு இது தான் வேலை! கோபத்தில் கொந்தளிந்த அமைச்சர் ரகுபதி!
புதுக்கோட்டை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை கவிழ்க்கும் வேலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஈடுபட்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு விஜயபாஸ்கர் தூது அனுப்பிக் கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விஜயபாஸ்கரின் சொந்தத் தொகுதியான விராலிமலைக்கு உட்பட்ட இலுப்பூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசும் போது தான் இப்படியொரு பரபரப்பை கிளப்பியுள்ளார் அமைச்சர் ரகுபதி.

மேலும், ராத்திரி 11 மணிக்கு மேல் விஜயபாஸ்கர் என்ன செய்வார் தெரியுமா என வினவிய அவர், அன்றைய வசூல் எவ்வளவு வந்துள்ளது என கணக்கு பார்ப்பார் என்றும் ரூ.1 கோடிக்கு குறைவாக வசூல் இருந்தால் அன்றைய இரவு விஜயபாஸ்கர் தூங்கவேமாட்டார் எனவும் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். வசூல் வருவாயில் குறியாக இருப்பது தான் விஜயபாஸ்கரின் பொழப்பு என்று அனல் கக்கினார் அமைச்சர் ரகுபதி.
பொதுவாக எப்போதுமே நார்மல் டோனில் பேசக்கூடிய அமைச்சர் ரகுபதி, ஆர்.எஸ்.பாரதி மேடையில் இருக்கிறார் என்பதற்காக விஜயபாஸ்கர் மீது அந்தப் பொதுக்கூட்டத்தில் கோபத்தில் கொந்தளித்தாரா எனத் தெரியவில்லை. யார் மீது வேண்டுமானாலும் குட்கா ஊழல் புகார் வரலாம், ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த ஒருவர் மீது இப்படிப்பட்ட புகார் வந்திருக்கலாமா என வேதனையை பகிர்ந்தார்.
விஜயபாஸ்கர் செய்த காரியங்களுக்கு வழக்குகள் தொடர்ந்தால் அவர் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்துக்கும் வீட்டுக்கும் தான் அலைய வேண்டியது வரும் எனத் தெரிவித்த ரகுபதி, விஜயபாஸ்கரின் லோக்கல் பாலிடிக்ஸ் பற்றியும் பேசினார். மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரியாக இருந்த போது திருமயம், பொன்னமராவதி பகுதிகளில் ஒரு டாக்டரை நியமிக்கக் கூட விஜயபாஸ்கருக்கு வக்கில்லை என சீறிய அமைச்சர் ரகுபதி திமுக ஆட்சியை பற்றி பேச என்ன தகுதி உள்ளது என வினவினார்.
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை தொகுதியிலிருந்து விஜயபாஸ்கரை விரட்டியடிப்போம் என்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவை விட திமுகவை லீடிங் பெற வைப்போம் எனவும் அமைச்சர் ரகுபதி சபதம் ஏற்றார்.












Click it and Unblock the Notifications