புழல் சிறையில் செந்தில் பாலாஜி என்ன சாப்பிடுகிறார்? சிறப்பு சலுகையா?.. அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்
புதுக்கோட்டை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். வெளியில் இருந்து எந்த உணவும் கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அங்கே AC வசதி போன்றவை எல்லாம் வைத்துக் கொடுக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம், 13-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அன்றிரவு விசாரணைக்காக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, உடனடியாக அதிகாரிகள் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அமைச்சரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு இதய ரத்தநாளங்களில் அடைப்புகள் இருப்பதை உறுதிசெய்தனர். மேலும், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரை செய்தனர். அதைத் தொடர்ந்து, அமைச்சரின் உறவினர்கள், அறுவை சிகிச்சைக்காக அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஒருமாதகால சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறிய அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் சிறப்பு சலுகைகள் தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைத்துறையில் முதல் வகுப்பு சிறைவாசிக்கு என்னென்ன சலுகைகள் உண்டோ? அந்த சலுகைகள் மட்டும்தான் வழங்கப்படுகிறது. கூடுதலாக யாருக்கும் எந்த சலுகையும் வழங்க முடியாது என்று கூறினார்.
சிறை கேண்டினில் அவர்கள் உணவு வாங்கிக் கொள்வதற்கு அனுமதி உண்டு. அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது வாரத்திற்கு ஆயிரம் ரூபாய் என்று அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையிலிருந்து அவர்கள் கேண்டினில் தங்களுக்கு விரும்பிய உணவை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.
வெளியில் இருந்து எந்த உணவும் கொண்டு வருவதற்கு அனுமதிக்கபடுவதில்லை. இன்றுவரை அப்படி செய்யப்படுவதும் கிடையாது. அங்கே AC வசதி போன்றவை எல்லாம் வைத்துக் கொடுக்க முடியாது. அப்படி வைத்தால் அடுத்த கைதிக்கு தெரிந்துவிடும். அடுத்த கைதிக்கு சொல்லிவிடுவார். ஒரு முதல் வகுப்பு கைதி, அடுத்த முதல் வகுப்பு சிறைவாசிக்கு சொல்லிவிடுவார் என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications