ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடியாரின் ஆட்சி செமையாக இருக்கு... புகழ்ந்து தள்ளிய ஓ.பன்னீர்செல்வம்!
புதுக்கோட்டை: - ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை 10 ஆண்டுகளில் செய்துள்ளோம் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
வாழ்வின் பிறவிப்பயனை அடைந்துள்ளேன்...காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட விழாவில் எடப்பாடியார் உருக்கம்!
முதல்வர் அடிக்கல் நாட்டினார்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பல்வேறு அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்களின் 100 ஆண்டு கனவு
வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.
நீர்மட்டம் உயரும்
இந்த திட்டத்தின் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும். 118.45 கி.மீ நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கரூர், திருச்சி, புதுக்கோட்டையில் குடிநீர் ஆதாரம் மேம்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
3-வது முறையாக ஆட்சியமைக்கும்
காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட தொடக்க விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:- ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை 10 ஆண்டுகளில் செய்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் அரசை வசை பாடிக் கொண்டு இருக்கிறார். மத்தியில் 15 ஆண்டு காலம் கூட்டணியில் இருந்தபோது திமுக என்ன செய்தது. ஸ்டாலினால் ஆட்சியை நம்மிடம் தட்டிப்பறிக்க முடியாது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் என்று துணை முதல்வர் கூறினார்.