யமுனை ஆற்றிலே.. ஈரக்காற்றிலே.. கல்லூரி விழாவில் கலக்கல் பரத நாட்டியம் ஆடிய புதுக்கோட்டை கலெக்டர்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, யாரும் எதிர்பார்க்காத வகையில் பரத நாட்டியம் ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Recommended Video
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முறைப்படி பரத நாட்டியம் கற்றவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
மாவட்ட ஆட்சியர் பரத நாட்டியம் ஆடுவார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மிக உற்சாகமாக கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாவட்ட ஆட்சியர்
பொதுவாக அரசு உயர் அதிகாரிகள் என்றாலே பணிச்சுமைகள் காரணமாக அவர்கள் சற்று கடுகடுப்புடனும் மிடுக்கான தோற்றத்துடனும் இருப்பார்கள். இந்நிலையில் அவர்களிடமிருந்து சற்று மாறுபட்டவராக திகழ்கிறார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. ஆம், தன்னை ஒரு மாவட்ட ஆட்சியர் என்று மட்டும் கருதாமல் அடித்தட்டு மக்களுக்கான சேவகியாக கருதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தன்னை சந்திக்க வரும் சாமானியர்களை கூட அழைத்துப் பேசி குறைகளை கேட்டறிந்து அனுப்பி வைக்கக் கூடியவர்.

மருத்துவக் கல்லூரி
இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா நேற்று கலந்துகொண்ட அவர், மாணவ மாணவிகளை கண்டதும் உற்சாகம் பொங்க பேசினார். அப்போது அவர் பரதநாட்டியம் கற்றவர் என்பதை அறிந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள், மேடம் நீங்க பரதநாட்டியம் ஆடுங்க என கோரஸாக குரல் எழுப்பினர். கோரிக்கைகளை நிவர்த்தி செய்தே பழக்கப்பட்ட கவிதா ராமு, மாணவர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றும் வண்ணம் உடனடியாக மேடையேறி பரத நாட்டியம் ஆடினார்.

யமுனை ஆற்றிலே
யமுனை ஆற்றிலே.. ஈரக்காற்றிலே.. என்ற பாடல் ஒலிக்க அந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நடனம் ஆடினார். ஒரு கலெக்டர் தங்கள் கோரிக்கையை ஏற்று நடனம் ஆடுவதை கண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உற்சாகத்தில் கரவொலி எழுப்பி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் பரத நாட்டியம் வீடியோ சமூக வலைதளங்களில் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளது.

பரத நாட்டிய கலைஞர்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவதற்கு முன்பாகவே பரத நாட்டியத்தை முறைப்பட்டி கற்று அரங்கேற்றம் செய்தவர் கவிதா ராமு. இந்திய குடிமைப் பணி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட பின்னரும் கூட பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் பரதநாட்டியம் மீதான தனது ஆர்வத்தை அவர் குறைத்துக்கொள்ளவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications