"இனிமேல் இங்க படிக்கவே கூடாது.." பழங்குடியின மாணவன் மீது புதுக்கோட்டை தலைமை ஆசிரியர் தாக்குதல்! கொடூரம்
புதுக்கோட்டை: அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்த பழங்குடியின மாணவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கேட்கச் சென்ற பெற்றோரையும் சாதிப் பெயரைச் சொல்லி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தலைமை ஆசிரியர் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவர்களை ஆசிரியரே நல்ல குருவாக இருந்து வழிநடத்துகிறார்கள். ஆனால், சில ஆசிரியர்கள் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலமே கூட கேள்விக்குறியாகிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

தாக்குதல்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கீழஏம்பல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றைய தினம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி என்பவர் அந்த மாணவரைக் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதனால் 3ம் வகுப்பு மாணவருக்கு உடலில் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தச் சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை தரப்பட்டு வருகிறது. எதற்காக மாணவரை இந்தளவுக்குக் கொடூரமாகத் தலைமை ஆசிரியர் அடித்தார் என விசாரித்தபோது தான் அது பேரதிர்ச்சியாக இருந்தது.
சாதி பெயரைச் சொல்லி
அதாவது அந்த மாணவன் பள்ளியில் இயற்கை உபாதைக்குச் சென்றுள்ளார். அதற்காகவே அந்த மாணவரை அடித்துள்ளார் தலைமை ஆசிரியர். இதை யார் க்ளீன் செய்வார்கள் எனக் கேட்டு கடுமையாகத் தாக்கியதாக மாணவரின் பெற்றோர்கள் குற்றம் சாட்டிள்ளனர். மேலும், இது குறித்துக் கேட்க மாணவரின் பெற்றோர், தலைமை ஆசிரியரின் வீட்டிற்கே சென்றுள்ளனர்.
அப்போது தங்களை ஜாதி பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் கிராம மக்களும் ஆசிரியரோடு சேர்ந்து கொண்டு தங்களைத் தாக்கியதாக மாணவனின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
படிக்கக் கூடாது
நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏழு பேர் அந்தப் பள்ளியில் படித்து வரும் சூழலில், அவர்கள் யாருமே அந்தப் பள்ளியில் படிக்கக்கூடாது எனச் சொல்லியதாகத் தெரிகிறது. இதற்காகவே தங்கள் மகனைத் தாக்கி, மிரட்டியதாகவும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் மாணவனை மிகக் கொடூரமாகத் தாக்கிய பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அவருக்கு ஆதரவாகத் தங்களைத் தாக்கிய கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 பிரிவுகளில் வழக்கு
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், மாணவரைத் தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் நடந்த விஷயம் குறித்து பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமை ஆசிரியர் ஒருவரே மாணவரை இதுபோல மிகக் கடுமையாகத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications