காதலித்த சித்தப்பா.. ஏற்காத மகள்.. வெட்டிக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை! புதுக்கோட்டை அருகே கொடூரம்!
மகள் முறை பெண்ணை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் புதுக்கோட்டை இளைஞர்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் மயிலாடிக்காடு கிராமத்தில், மகள் முறை கொண்ட கல்லூரி மாணவி தனது காதலை ஏற்க மறுத்ததால் அந்த மாணவியை வெட்டிக் கொன்றுவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி அவரது உறவினராலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் துரை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளவாய்பட்டி அருகே உள்ள மயிலாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான துரைக்கண்ணு என்ற 35 வயது வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். துரைக்கண்ணுவுக்கு, பவித்ராவை விட 15 வயது அதிகம். மேலும், துரைக்கண்ணுவுக்கு பவித்ரா, மகள் முறை வேண்டுமாம்.

சித்தப்பா முறை
பவித்ராவிடம் துரைக்கண்ணு தனது காதலைச் சொன்ன நிலையில் அவர் ஏற்கவில்லை. சித்தப்பா முறை கொண்ட வாலிபரை காதலிக்க பவித்ரா விரும்பவில்லை. ஆனாலும், விடாமல் பலமுறை பவித்ராவிடம், தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார் துரைக்கண்ணு. ஆனாலும், பவித்ரா முடியவே முடியாது என மறுத்துள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை
தனது காதலை பவித்ரா ஏற்க மறுத்ததால் கடந்த சில நாட்களாக கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளார் துரைக்கண்ணு. இந்நிலையில் இன்று பவித்ராவின் வீட்டுக்குச் சென்ற துரைக்கண்ணு, தனியாக இருந்த பவித்ராவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது வீட்டுக்குச் சென்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விசாரணை
இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications