ராமநாதபுரம் சித்ரா தேவி.. கமுதி ஆபிஸில் கையும் களவுமாக சிக்கி.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழ வில்லானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விஏஓ மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கமுதி தாசில்தார் அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
அண்மைக் காலமாக கிராம நிர்வாக அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் அடுத்தடுத்து வழக்குகளில், லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள். சென்னையில், திருவண்ணாமலையில், திருப்பூரில், தேனியில் என அடுத்தது அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு அதிகாரி தனது உதவியாளருடன் லஞ்சம் வாங்கி வழக்கில் சிக்கி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழ வில்லானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் என்பவர் வீடு கட்டும் பணிக்காக சவடு மண் அள்ளுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவியை அணுகி உள்ளார்,. இதற்கு அனுமதி வழங்க அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதில் முதல் தவணையாக ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரவேல் இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரனிடம் புகார் கூறியிருக்கிறார். இதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை வழங்கி உள்ளார்கள். அதை குமரவேல் எடுத்துக் கொண்டு நேற்று கமுதி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவியிடம் லஞ்சப் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார். அதற்கு அவர் கிராம உதவியாளர் வேல்முருகனிடம் பணத்தை கொடுக்குமாறு கூறினாராம்.
இதையடுத்து ரூ.5 ஆயிரத்தை வேல்முருகனிடம் கொடுத்த போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்தார்கள். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவி, உதவியாளர் வேல்முருகனை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தாசில்தார் சேதுராமன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசுவரன் ஆகியோரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கமுதி தாசில்தார் அலுவலகத்தில் விஏஓ மற்றும் அவரது உதவியாளர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications