இறப்பிலும் இணைய பிரியா தம்பதி.. உடலில் துணியை கட்டிக் கொண்டு ராமேஸ்வரம் கடலில் விழுந்த தம்பதி
ராமேஸ்வரம்: இறப்பிலும் பிரிய கூடாது என உடலில் துணியை கட்டிக்கொண்டு கணவன்-மனைவி ஒன்றாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் விழுந்து தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரம் வந்துள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண், பெண் என இரு சடலங்கள் மிதப்பதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமேஸ்வரம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் உதவியுடன் இரு உடலையும் மீட்ட மெரைன் போலீசார் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் உடலில் அணிந்திருந்த சட்டையில் இருந்து கிடைத்த ஆதார் அட்டையை வைத்து மரைன் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கோவை மாவட்டம் சமத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (62), அவரது மனைவி தனலெட்சுமி (59) என தெரியவந்தது.

பொள்ளாச்சியில் அரசு ஊழியர்
ஆறுமுகம் பொள்ளாச்சி ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி தனலட்சுமி காதி கிராப்ட்டில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 23 வயதில் ஒரு மகன் இருந்தார். அவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே மகனை இழந்துவிட்டோமே என கணவனும் மனைவியும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் அறை எடுத்து தங்கிய தம்பதி
இந்த நிலையில் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை காலை ராமேஸ்வரம் வந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் ஆறுமுகத்தின் உறவினர்களுக்கு அவர் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில் 'எனது சொத்தை விற்று என மகன் பெயரில் அறக்கட்டளை துவங்கி மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.

தற்கொலை
அதற்கான ஆவணங்கள் வீட்டில் தயாராக வைத்துள்ளேன். நாங்கள் இருவரும் ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்ய போகிறோம்' என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கடலில் விழுந்து தற்கொலை செய்து உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கோவை கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் உயிரிழந்த ஆறுமுகத்தின் உறவினர்களுக்கு மரைன் போலீஸார் தகவல் அளித்ததன் அடிப்படையில் உடலை பெற்று செல்ல அவரது உறவினர்கள் ராமேஸ்வரத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

துணியை கட்டிக் கொண்டு கடலில் விழுந்த தம்பதி
தற்கொலை செய்து கொண்ட தம்பதியின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறப்பிலும் பிரியக் கூடாது என்பதற்காக உடலில் துணியை கட்டிக் கொண்டு கணவன்-மனைவி ஒன்றாக அக்னி தீர்த்த கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கடலில் குளித்து கொண்டிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.












Click it and Unblock the Notifications