உயிரை பறித்த கிரிக்கெட் பந்து... நெஞ்சில் பட்டு இறந்த சிறுவன் - ராமநாதபுரம் அருகே சோகம்
ராமநாதபுரம்: கிரிக்கெட் விளையாடும்போது நெஞ்சில் பந்து பட்டு 11 வயது சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே வன்னிவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார். இவரது மகன் சுபாஷ் குமார்(11). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் எப்போதும் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் சுபாஷ் குமார்.
கோடை விடுமுறை என்பதால் நேற்றும் தனது நண்பர்களுடன் வழக்கம்போல அப்பகுதியில் சுபாஷ் குமார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சிறுவன் சுபாஷ் குமாரின் நெஞ்சில் கிரிக்கெட் பந்து வேகமாக விழுந்தது. பந்து பட்ட வேகத்தில் சிறுவன் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பர்கள் உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீஸார்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாடும்போது பந்து பட்டு மாணவர் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.