பள்ளி மாணவிகளை தூக்க வைத்து கொடுமை.. தீயாகப் பரவிய வீடியோ.. அதிரடியாக 4 பேர் சஸ்பெண்ட்!
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் அரசுப் பள்ளி மாணவிகளை வைத்து பாடப்புத்தகங்களை லாரியிலிருந்து இறக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு லாரியில் வந்த புத்தக பண்டல்களை மாணவிகளே சுமந்து சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, விசாரணை நடத்தி அரசுப் பள்ளி மாணவிகளை புத்தகங்களை சுமக்க வைத்ததற்காக, மூன்று ஆய்வக உதவியாளர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் அரசுப் பள்ளி
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து ராமேஸ்வரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இந்த கல்வி ஆண்டுக்குரிய பாடப் புத்தகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்டன. அங்கு லாரியில் இருந்து புத்தகக் கட்டுகளை ஊழியர்களை வைத்து இறக்காமல் பள்ளி மாணவிகளை வைத்து இறக்கியுள்ளனர்.

பள்ளி மாணவிகள்
லாரியில் இருந்து புத்தகங்களை இறக்கும் வேலைக்கு ஊழியர்களை பயன்படுத்தாமல், பள்ளி மாணவிகளை, புத்தகங்களை இறக்கி சுமந்து சென்று பள்ளியில் வைக்கும் வேலையில் ஈடுபடுத்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது.

சி.இ.ஓ விசாரணை
இதையடுத்து ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாணவிகளை சுமக்க வைப்பது தவறு. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் முருகம்மாளிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் பணிக்கு நியமிக்கப்பட்ட 4 பேரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

4 பேர் சஸ்பெண்ட்
பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் பணிக்கு நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்கள் பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியின் சண்முகசுந்தரம், வாலந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளியின் சே.கார்த்திகேயன், இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளியின் ப.கார்த்திகேயன், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி இரவு காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை 'சஸ்பெண்ட்' செய்து, முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications