பிரதமர் மோடி ராம ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார்.. மீண்டும் பரபரப்பைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
ராமநாதபுரம்: பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து ராம ராஜ்ஜியம் நடத்தி வருகிறார் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். மோடி ஆட்சியில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3வது இடத்தை பிடிக்கும் என்றும் ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
தமிழக ஆளுநா் ஆர்.என்.ரவி இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற 35 ஆம் ஆண்டு கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றடைந்தார். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் பங்கேற்று மருத்துவர் இரா.குலசேகரன் எழுதிய 'கம்பனில் இலக்கிய தாக்கம்' என்ற நூலை வெளியிட்டார். கம்பர் புகழை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரப்ப பெரும் பங்காற்றிய அகில இலங்கை கம்பன் கழகத்தைச் சேர்ந்த இ.ஜெயராஜ்க்கு திருஞானசீலர் என்ற விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி விருதை வழங்கினார்.
பின்னர் இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், "சிறுவயதில் எனது பாட்டி 100 ஆண்டுகளுக்கு முன்பே ராமேஸ்வரத்திற்கு யாத்திரை வந்தது பற்றியும், இங்குள்ள ராமாயண தொடர்புகளையும் எனக்கு கதைகளாக கூறினார். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒருமுறையாவது ராமேசுவரத்திற்கு வந்து வழிபட வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. நவீன இந்தியாவை உருவாக்கிய அப்துல் கலாமும் இங்கே தான் பிறந்தார்.
கம்பர் ஒரு கவிஞர் மட்டுமல்ல, அவர் ஒரு சித்தர், மகரிஷி என்றே கூறலாம். பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவில் ராமாயணம் மூலம் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். நாம் வெவ்வேறு மொழி, இனம், மதங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் நாம் ஒரே நாடாக, குடும்பமாக உள்ளோம். நமது பாரத நாட்டின் ஆன்மாவாக பகவான் ராமர் இருக்கிறார்.
ஸ்ரீ ராமர் ஆட்சி காலத்தில் அவர் நல் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்ததால் தான், இந்தியா சிறந்த நாடாக உள்ளது. இதனை மையமாக வைத்து தான் நம் அரசியல் சாசனமும் உருவானது. ராமாயணத்தை பாமர மக்களும் எளிதில் தெரிந்திடும் வகையில் கம்பர் எடுத்துரைத்தார்.
தற்போது பிரதமர் மோடி ராமராஜ்ஜியம் நடத்தி வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி பணிபுரிகிறார். சில வெளிநாட்டு தீய சக்திகள் நம்மை ஆரியர், திராவிடர்கள் என பிரித்தாள நினைக்கிறார்கள். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு நம் நாடு தான். இதனையே பிரதமர் மோடியும் பின்பற்றி அனைத்து துறைகளையும் கட்டமைத்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இன்று உலக பொருளாதாரத்தில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளது. வருங்காலத்தில் அனைத்து துறைகளையும் வளர்ச்சி அடைந்து 3வது இடத்திற்கு முன்னேறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications