தேடி வந்து பழிதீர்த்த பகை.. தலை வேறு உடல் வேறாக போன ரவுடி.. ராமநாதபுரத்தை அலறவிட்ட பயங்கர கொலை!
ராமநாதபுரம்: பழிக்கு பழி தீர்க்கும் விதமாக பயங்கர ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடியின் தலையை தனியாக துண்டித்து அதை ஒரு இடத்திலும், உடலை வேறு இடத்திலும் வீசிவிட்டு கொலையாளிகள் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வாகனத் தணிக்கை உள்ளிட்ட கண்காணிப்பு பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் சம்பவம்
ஒருவர் செய்யும் நன்மை - தீமைக்கு கட்டாயம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பது இயற்கையின் நியதி. இன்று நம்மிடம் பண பலம், ஆள் பலம் இருக்கிறது என்ற துணிச்சலில் படுபாதக செயல்களை செய்த பலர், பிற்காலத்தில் அதற்கான பலன்களை அனுபவித்திருப்பதை பார்த்திருக்கிறோம். 'கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு' என்று பெரியவர்கள் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாமே பல இடங்களில் பாத்திருப்போம். ஒரு மாவட்டத்தையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பல பிரபல ரவுடிகள், சாதாரண நபர்களால் படுகொலை செய்யப்படுவதையும், என்கவுன்ட்டர் மூலம் தீர்த்துக்கட்டுவதையும் தினமும் கண்கூடாக பார்க்க முடிகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் ராமநாதபுரத்தில் நடந்திருக்கிறது.

பிரபல ரவுடி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள செங்கமடை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (36). இவர் மீது ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராமநாதபுரத்தில் பிரபல ரவுடியாகவும் இவர் வலம் வந்தார். முத்துப்பாண்டி நேரில் கூட வராமல் அவரது பெயரை சொல்லியே பல கட்டப்பஞ்சாயத்துகள் நடத்தி முடிக்கும் அளவுக்கு அவர் ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெயர் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

தலை இல்லாத உடல்..
இந்நிலையில், நேற்று இரவு முதல் முத்துப்பாண்டியை காணவில்லை எனத் தெரிகிறது. அவரை அவரது கூட்டாளிகளும், உறவினர்களும் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில், இன்று காலை செங்கமடையில் உள்ள ஒரு வயல்வெளியில் ஒரு தலை இல்லாத ஆண் சடலம் இருப்பதை அந்த கிராம மக்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அப்போது போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தியதில், அந்த உடல், ரவுடி முத்துப்பாண்டி உடையது என உறுதி செய்யப்பட்டது.

தேடுதல் வேட்டை தீவிரம்
இதையடுத்து, அவரது தலை சில கிலோமீட்டருக்கு அப்பால் வீசப்பட்டிருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்பகை காரணமாகவே ரவுடி முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொலையாளிகளை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில், ரவுடி முத்துப்பாண்டியின் கூட்டாளிகள் அங்கு குவிந்து வருவதால் அசம்பாவிதத்தை தவிர்க்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications