கோவை சிறையில் தேனி கணேசனின் பிளான்.. ராமநாதபுரம் வீட்டில் 110 பவுன் தங்கம் கொள்ளை எப்படி நடந்தது?
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள அம்மாபட்டினம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரது வீட்டில் புகுந்து 110 பவுன் தங்க நகை மற்றும் ரூ.45 ஆயிரம் கொள்ளை அடித்த வழக்கில் தேனியை சேர்ந்தவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை சிறையில் திட்டமிட்ட கும்பல், ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வாரத்திற்குமேல் தீவிரமாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள அம்மாபட்டினம் கிராமத்தில் 52 வயதாகும் கனகராஜ் என்பவர், தனது மனைவி வெள்ளையம்மாளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி தங்களது வீட்டை பூட்டிவிட்டு தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தனது மகள் தீபிகா வீட்டுக்கு சென்றுவிட்டார்கள்.

அப்போது கனகராஜின் வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த 2 பேர், பீரோவில் வைத்திருந்த 110 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.45 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்கள். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்
போலீசாருக்கு, தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் (60) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தேனியில் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரவம்பாளையம் பகுதியை சேர்ந்த யுகேந்திர பிரசாத் (21) என்பவருடன் சேர்ந்து மேற்கண்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறினார். எனவே இருவரையும் கைது செய்து, ராமநாதபுரம் கொண்டு வந்து விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் கணேசன் தொடர்பு உடையவர். இவரை ஈரோட்டில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து யுகேந்திர பிரசாத், திருப்பூரில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர்கள் இருவருக்கும் சிறையில் வைத்து பழக்கம் ஏற்பட்டு பெரிய அளவில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதார்களாம். இதற்காக கணேசன் ராமநாதபுரத்தை தேர்வு செய்துள்ளார். இருவருக்கும் ஜாமீன் கிடைத்த நிலையில் ராமநாதபுரம் வந்துள்ளார்.
ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வாரத்திற்குமேல் தீவிரமாக நோட்டமிட்டாராம். அப்போதுதான் அம்மாபட்டினத்தில் கனகராஜ் வீடு பூட்டி இருந்ததை கண்டு, இரவில் அங்கு புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இந்த நகைகளை தேனி மாவட்டத்திற்கு கொண்டு சென்று அங்கு வருசநாட்டை சேர்ந்த காசிமாயன் (52) என்பவரிடம் கொடுத்து நகைகளை பணமாக மாற்றி தருமாறு கேட்டார்களாம். காசிமாயன் சில நகைகளை பணமாக மாற்றி கொடுத்ததோடு சில நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளாராம். இந்த பணத்தை 3 பேரும் பங்கு பிரித்து உல்லாசமாக இருந்துள்ளார்களாம். இந்த வழக்கில் வருசநாடு காசிமாயனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications