ராமநாதபுரம் கடற்கரையில் பஞ்சு போல் ஊர்ந்த உயிரினம்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! ஒரே பரபரப்பு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் சுற்றுலா பயணிகள் அஞ்சினர். அவர்களில் சிலரை இந்த மீன்கள் கடித்ததால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரியமான் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதுண்டு. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கடற்கரை 150 மீட்டர் அகலமும் 2 கி.மீ. நீளமும் கொண்டது.

இங்கு சவுக்கு மரங்கள் நிறைந்திருக்கும். இதனால் இந்த கடற்கரையின் அழகே அழகுதான். எனவே ராமேஸ்வரம் வருவோர் இந்த கடற்கரைக்கு வராமல் செல்ல மாட்டார்கள். இங்கு எப்போதும் குளிர்ந்த காற்று வீசும். அதனாலேயே இது சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாக உள்ளது.
இங்கு சிறிய கடைகள் உள்ளன. உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தால் அதை சமைத்து கொடுப்பார்கள். இங்கு குறைந்த உயரத்தில் மட்டுமே கடல் அலைகள் எழும்பும். ஆனாலும் ஜாக்கிரதையாக குளிக்க வேண்டும். இங்கு பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி, செயற்கை இடி மின்னல், நீர் சறுக்கு, செயற்கை அருவி உள்ளிட்டவை இருக்கின்றன. இங்கு இரவு நேரத்தில் தங்கி கடற்கரையின் அழகை ரசிக்க ரிசார்ட்டுகளும் உள்ளன.
இந்த நிலையில்தான் இந்த கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற போது ஜெல்லி மீன்கள் இருந்ததாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கடலில் குளித்த பயணிகள் கூறுகையில் ஞாயிற்றுக்கிழமையை என்ஜாய் செய்யலாம் என அரியமான் கடற்கரைக்கு வந்தோம். இங்கு குளிக்கலாம் என கடலில் இறங்கிய போது நிறைய ஜெல்லி மீன்கள் இருந்தன. இதனால் நாங்கள் கடலில் குளிக்கவில்லை.
ஒரு அடி இரண்டு அடி தூரத்திலேயே அவை இருந்தன. அது கடித்தாலே அரிக்க ஆரம்பிக்கிறது. கை, கால்களில் ரத்த ஓட்டமே நிற்பது போல் இருக்கிறது. முழங்காலுக்கு கீழ் என்னை கடித்ததால் கடுமையான வலி இருக்கிறது.
தண்ணீர் கண்ணாடி போல் இருப்பதால் அந்த ஜெல்லி மீன்கள் வருவது தெரியவில்லை. அதன் வால்கள் 1 அடி நீளத்திற்கு இருக்கிறது. அவை பட்டாலும் கடுமையான வலி ஏற்படுகிறது. நடந்த இரு காலடிகளிலேயே நிறைய ஜெல்லிகள் இருக்கின்றன. எனவே இந்த இடத்தில் மட்டும் லட்சக்கணக்கில் இருக்கும்.
இந்த ஜெல்லி மீன்கள் ஏன் வெளியே வந்தன என தெரியவில்லை. ஒரு வேளை இனப்பெருக்க காலமாக இருக்கலாம். ஆயினும் ஜெல்லி மீன்கள் வெளியே வராதபடி சுற்றுலா துறையும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஜெல்லி மீன்கள் இருப்பதை அறிந்து யாருக்கெல்லாம் அந்த மீன்கள் பட்டதோ அவர்களுக்கு அங்கேயே செவிலியர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெல்லி மீன்கள் கடித்த இடத்தில் களிம்பு தடவப்பட்டது.
கடந்த மாதம் திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நாடிய போது ஜெல்லி மீன்கள் கரைக்கு வந்தன. இது பார்ப்பதற்கு கண்ணாடி போலும் நுங்கு வடிவத்திலும் இருந்தது. பார்ப்பதற்கு பஞ்சு போல் சாஃப்பட்டாக இருந்தது. ஜெல்லி மீன்கள் நம் உடலில் பட்டால் அலர்ஜியை ஏற்படுத்தும். தோல் தடித்தல், அரித்தல், சிவப்பு நிறமாகுதல் உள்ளிட்டவை ஏற்படும் என்பதால் அதை கையால் யாரும் தொட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
கோடை காலமான பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கும். எனினும் அவ்வப்போது கால நிலை மாற்றத்தினாலும் இந்த ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதாக கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீன்கள் கடித்த இடத்தில் உமிழ்நீரையோ தேங்காய் எண்ணெய்யையோ தடவினால் சரியாகும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications