ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. உச்சக்கட்ட கட்டுப்பாடுகள்.. அவசர வாகனத்திற்கு மட்டுமே அனுமதி!
ராமநாதபுரம்: பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை ராமேஸ்வரம் வரும் நிலையில், உச்சக்கட்ட பாதுகாப்பு தயார் நிலையில் உள்ளது. அதேபோல் நாளை பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை ராமேஸ்வரத்தில் எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. அவசர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்ப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பழமை வாய்ந்த பாம்பன் தூக்கு பாலத்திற்கு பதிலாக ரூ.550 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய ரயில்வே பாலத்தை நாளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் தமிழ்நாடு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் பாம்பன் பாலத்தை நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் பிரதமர், இதையடுத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து டெல்லி பயணிக்கவுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசர தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில்படையின் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மதுரை ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் ரூ.8,300 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.
பாம்பன் பாலம் மட்டுமல்லாமல், ராணிப்பேட்டை 4 வழிச்சாலை பணிக்காக அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல் விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான 29 கிமீ நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாக மாறியுள்ள கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications