தொடர் சில்மிஷம்.. விடாத "ஹெட் மாஸ்டர்".. கதறிய மாணவிகள்.. ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெற்றோர்கள்!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி ஒன்றில் தலைமையாசிரியர் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் எனவே உடனடியாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தலைமையாசிரியர் ஒருவர் புதியதாக பணியமர்த்தப்பட்டார். ஆனால் இவர் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இந்த பள்ளியில் சுற்றுப்புறத்திலிருக்கும் கிராமத்திலிருந்து சுமார் 43 மாணவிகள் மற்றும் 39 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் இந்த தலைமை ஆசிரியர் சில மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. மாணவிகளிடம் ஆபசமாக பேசுவது, அடிக்கடி தனது அறைக்கு அழைத்து பேசுவது என்று இருந்துள்ளார். இது கொஞ்சம் கொஞ்சமாக மாணவிகளிடையே அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடக்கத்தில் தலைமையாசிரியரின் நோக்கம் குறித்து மாணவிகளுக்கு தெரியவில்லை.
6-வது மாடியில் இருந்து குதித்து சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை.. காதல் தோல்வி காரணமா? போலீஸ் விசாரணை
எதிர்ப்பு
ஆனால் இந்த விஷயத்தை பெற்றோர்களிடத்தில் கூறியபோது அவர்களுக்கு சரியாக புரிந்திருக்கிறது. எனவே உடனடியாக ஊர் மக்களுக்கு இவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஊர் முழுவதும் இதே பிரச்னை இருந்திருப்பதை எல்லோரும் உணர்ந்திருக்கின்றனர். எனவே இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்கையில் அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஊர் மக்கள் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரையடுத்து அவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்ற கிராமத்தினர், பாலியல் சீண்டல் விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த புகார் மனுவையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உடனடியாக அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாலியல் புகாரில் தலைமை ஆசிரியருக்கு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஒருவரும் உடந்தையாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மிரட்டல்
அதாவது இந்த விவகாரம் வெளியில் கசிய தொடங்கியவுடன் சம்பந்தப்பட்ட மாணவிகளை அழைத்து இது குறித்து வெளியில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள கூடாது எனவும் மீறி சொன்னால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் இந்த ஆங்கில ஆசிரியர் மிரட்டியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே தலைமை ஆசிரியருடன் சேர்ந்து ஆங்கில ஆசிரியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளக்கம்
குற்றச்சாட்டுகள் குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது, "எங்களிடம் குற்றச்சாட்டு வந்த உடனேயே நாங்கள் விசாரிக்க தொடங்கிவிட்டோம். விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை விரைவில் எங்கள் கைகளுக்கு கிடைக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார். இச்சம்பவத்தையடுத்து பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.