ரூ.10 நாணயத்தை பெற மறுத்தால்.. 3 ஆண்டு சிறை! ராமநாதபுரம் ஆட்சியர் அதிரடி - கடைக்காரர்களே கவனம்
ராமநாதபுரம்: ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூ.10 நாணயத்தை வியாபாரிகள் முதல் பேருந்து நடத்துநர்கள் வரை பலர் ஏற்க மறுத்து வரும் நிலையில், அவ்வாறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை புழக்கத்தில் விட்டது. தொடக்கத்தில் "வேற்றுமையில் ஒற்றுமை" மற்றும் "இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்" என்ற கருப்பொருளுடன் அந்த நாயணம் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வெவ்வேறு வடிவமைப்புகளில் ரிசர்வ் வங்கி ரூ.10 நாணயத்தை வெளியிட்டு வந்தது. பல்வேறு வடிவமைப்புகளில் இருந்த காரணத்தால் ரூ.10 நாணயத்தில் போலிகள் வருவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதேபோல் ரூ.10 நாணயமே செல்லாது என்று கூறப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வதந்தியை மக்கள் நம்பி வருகிறார்கள்.

இதன் காரணமாக சில்லரை வணிக கடைக்காரர்கள், வியாபாரிகள் தொடங்கி பேருந்து நடத்துநர்கள் வரை பல இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கின்றனர். இதன் காரணமாக, பொதுமக்களும் பத்து ரூபாய் நாணயங்களை பெறுவதற்கும், தங்களிடம் வைத்திருக்கவும் தயங்குகின்றனர். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்து ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது தொடர்பாக மாவட்ட அளவிலான நாணய மேலாண்மை குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் கூடி ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுத்தது.
அதன்படி பேருந்து ஊழியர்களிடம் ரூ.10 நாணயங்களை வாங்க மாநில அரசிடம் அறிவுறுத்துவது, இது பற்றிய விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்டுவது, அனைத்து வங்கிகள் மூலமாக விளம்பரங்களை வெளியிடுவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. எத்தனை விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணி பரிமாற்றத்தின்போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும். அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications