ராமநாதபுரம் அருகே கண்மாயைக் கடக்க முடியாமல் தவிப்பு - கிராம மக்களே அமைத்த தற்காலிக பாலம்!
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, கண்மாயை கடந்து செல்ல, ஊர் மக்களே ஒன்றுகூடி தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். அதில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு விவசாய பணிகளை செய்யும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
Recommended Video
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது எஸ்.வி. மங்கலம் கிராமம் இங்கு சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அனைவருமே விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

10 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலை
இந்நிலையில், இங்கு உள்ள கண்மாய் நீர் பாசனம் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த விவசாய நிலத்திற்கு கண்மாய் வழியாக சென்று தான் விவசாயம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பருவ மழை காலங்களில் கண்மாயில் நீர் நிரம்பினால் விவசாயம் செய்வதற்கு சுமார் பத்து கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்
இதனை கருத்தில் கொண்டு கண்மாயில் சிறிய பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அலட்சியப் போக்காக அதைக் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கண்மாய் நிரம்பியதால் மக்கள் தவிப்பு
இதனிடையே, வைகை ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கண்மாய் நிரம்பி உள்ளது. தற்பொழுது விவசாயம் ஆரம்பிக்கும் நேரம் என்பதால் விவசாய நிலங்களில் உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் அடுத்த வாரம் இங்கு அமைந்துள்ள காவல் தெய்வமான சோனையா கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

ஊர்மக்கள் அமைத்த தற்காலிக பாலம்
பாலம் அமைத்து தராமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், வேறு வழியின்றி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மரக்கட்டைகளை வைத்து தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். அதன் வழியே ஆபத்தான பயணம் மேற்கொண்டு விவசாய பணிகளை செய்து வருகின்றனர். உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையில் பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications