வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிரடி உத்தரவு.. சாட்டையை சுழற்றும் ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சிகள்
ராமநாதபுரம்: வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்து வருபவர்களின் விபரங்களை சமர்பிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.
ராமேஸ்வரத்தில் மீனவப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஒடிசாவை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

புதுமடம்
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 26 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் ஊராட்சி மன்ற செயல் அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில், "புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளி மாநில நபர்களை வைத்து வீடு கட்டும். வீட்டின் உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டிட காண்ட்ராக்டர்கள் தங்கள் மூலமாக வேலை பார்க்கும் வெளி மாநில நபர்களின் ஆதார் நகல், புகைப்படம் மற்றும் கைபேசி எண் ஆகிய ஆவணங்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கீழக்கரை நகராட்சி
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மன்ற தலைவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில நபர்களை வைத்து வீடு கட்டும் கட்டிட உரிமையாளர்கள், கட்டிட இன்ஜினியர்கள், கட்டிட காண்டிராக்டர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், பானிபூரி மற்றும் குல்பி ஜஸ் வைத்து தொழில் செய்து வருபவர்கள் உள்ளூர் வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளிமாநில நபர்களின் பெயர், வயது, புகைப்படம், ஆதார் அட்டை, கைப்பேசி எண், தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர், தற்போதைய முகவரி, நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், நிறுவனத்தின் உரிமையாளரின் ஆதார் எண், கைப்பேசி எண், தற்போதைய இருப்பிட முகவரி ஆகியவற்றை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் வரும் 15.06.2022 ம் தேதிக்குள் உடனடியாக சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்." என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

ராமேஸ்வரம் நகராட்சி
இதேபோல் நேற்று ராமேஸ்வரம் நகராட்சி மன்ற தலைவரும் வெளி மாநில தொழிலாளர்களின் ஆவணங்களை கேட்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், "ராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில நபர்களை வைத்து வீடு கட்டும் கட்டிட உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டிட காண்டிராக்டர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், பானிபூரி மற்றும் குல்பி ஜஸ் வைத்து தொழில் செய்து வருபவர்கள் உள்ளூர்வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளிமாநில நபர்களின் பெயர், வயது, புகைப்படம், ஆதார் அட்டை, கைப்பேசி எண், தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர், தற்போதைய முகவரி, நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், நிறுவனத்தின் உரிமையாளரின் ஆதார் எண், கைப்பேசி எண், தற்போதைய இருப்பிட முகவரி ஆகியவற்றை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் வரும் 15.06.2022 ம் தேதிக்குள் உடனடியாக சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும்.

பொதுமக்கள் கோரிக்கை
தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்." என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் பாதுகாப்பு கருதி வெளிமாநில தொழிலாளர்களின் தனி நபர் விபரங்கள், ஆவணங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications