சமூகங்களுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் ராமநாதபுரம் பாஜக நிர்வாகி.. எஸ்டிபிஐ அதிரடி கேள்வி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூகங்களுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சமூகங்களுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கோடு, பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளரான குருஜி என்பவர் சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவிட்டு வந்தார். முஸ்லிம்கள் குறித்தும், முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கும் இறைநேசர்களை அவமதிக்கும் வகையிலும், தர்காக்கள் குறித்தும் அவர் அவதூறான விஷக்கருத்துக்களை தொடர்ச்சியாக பரப்பி வந்தார்.

இதையடுத்து எஸ்டிபிஐ கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் அவர் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். ஆனாலும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காத நிலையில், உயர்நீதிமன்றத்தை நாடியதை தொடர்ந்தே அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யபப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள போதும், ஜாமீனில் எளிதாக விடுதலையாகும் வகையில் அவர் மீது சாதாரண வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆன்மீக பேச்சாளர்களின் சமூக வலைதளங்களை கண்காணித்து அவர்களின் பதிவுக்காக அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழும், யுஏபிஏ சட்டடத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைக்கும் காவல்துறை, சகோதரர்களாக பழகி வரும் இருவேறு சமூகங்களுக்கிடையே வெறுப்பை விதைத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டு வந்த பாஜக நிர்வாகி குருஜி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்ற தலையீடுக்கு பின்னரே அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் பாரபட்சமாகவும், வெறுப்பை விதைக்கும் பாஜக நிர்வாகிக்கு துணை போகும் வகையிலும் உள்ளது. பாஜகவில் மாநில நிர்வாகியாக இருப்பதால் சட்டநடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுகின்றதோ என்கிற கேள்வி எழுகின்றது.
ஆகவே, தமிழகத்தின் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும், வன்முறை அரசியலை தூண்டும் வகையிலும், தொடர்ச்சியாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக விசமக்கருத்துக்களை பரப்பி வரும் குருஜி மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அப்துல் ஹமீது அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications