ராமேஸ்வரம் அருகே நள்ளிரவில் குழந்தையுடன் படகில் தப்பிய தம்பதி.. இலங்கை சென்றதும் நடந்த ட்விஸ்ட்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் மனைவி குழந்தைகளுடன் வாழந்து வந்த இலங்கையைச் சேர்ந்த சாருஜன், யாருக்கும் தெரியாமல் பாம்பன் கடல் வழியாக படகில் இலங்கைக்கு தப்பி சென்றுள்ளார். அவர்கள் இலங்கை கடற்படையிடம் சிக்கிய நிலையில், அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மிகவும் பாதுகாப்பான கடல் பகுதியில் அகதிகள் தப்பி சென்ற விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் 25 வயதாகும் சாருஜன் இலங்கை அகதி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவி அம்பிகா (25), இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து படகில் தப்பி ராமேசுவரம் வந்து, அதன் பின்னர் அகதிகளாக பதிவு செய்து மண்டபம் அகதிகள் முகாமில் இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சாருஜன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெளியேறி பாம்பன் குந்துகால் கடற்கரைக்கு வந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கள்ளத்தனமாக படகு மூலம் ஏறி இலங்கைக்கு தப்பிச்சென்றிருக்கிறார்.
இலங்கை கடல் பகுதியில் இந்த தம்பதியை அந்நாட்டு கடற்படையினர் மீட்டு, தலைமன்னார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் இலங்கையில் உள்ள முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இவர்களை படகில் அழைத்துச்சென்ற படகோட்டி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மண்டபம் முகாமில் இருந்து வெளியேறி குழந்தையுடன் கணவன், மனைவி படகில் இலங்கைக்கு தப்பிய சம்பவம் உளவுப்பிரிவு போலீசாரை ஆடிப்போக வைத்துள்ளது. இலங்கை இந்தியா இடையே உள்ள கடலில் இருநாட்டு கடற்படைகளும் தீவிரமாக கண்காணிப்பார்கள்.
கண்காணிப்பை மீறியும், போலீசாருக்கு தெரியாமல் இலக்கை தம்பதி இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து தப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரும், கடற்படையினரும் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications