கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா இன்று தொடக்கம்- தமிழ்நாட்டு மீனவர்கள் புறக்கணிப்பு!
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே உள்ள இலங்கை நிர்வகித்து வரும் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா இன்று தொடங்குகிறது. இலங்கை சிறையில் மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை தமிழ்நாட்டு மீனவர்கள் புறக்கணித்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு- தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி. இது ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானது. ஆனால் 1974-ம் ஆண்டு மத்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று வரை பெரும் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

கச்சத்தீவில் அந்தோணியார் தேவாலயம் ஒன்றையும் தமிழ்நாட்டு மீனவர்கள் கட்டி இருந்தனர். இந்த தேவாலய திருவிழாதான் தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழர்களிடையே இணைப்புப் பாலமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு திருவிழாவில் இருநாட்டு மீனவர்களும் பங்கேற்று தங்களது உறவை வலுப்படுத்தி வந்தனர்.
ஆனால் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறவில்லை. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்கு பின்னர் கச்சத்தீவு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும். இருநாட்டு மீனவர்களும் பல்லாயிரக்கணக்கில் இந்த திருவிழாவில் பங்கேற்பர்.
இந்த ஆண்டும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க 3,265 மீனவர்கள் பதிவு செய்திருந்தனர். மொத்தம் 75 விசைப்படகுகள், 24 நாட்டுப் படகுகளில் கச்சத்தீவு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தொடர்ந்து தண்டனை விதித்து சிறைகளில் அடைத்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டு மீனவர்களை கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வைக்க இலங்கை தமிழ் மீனவர்கள் தரப்பினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications