மதிப்பெண்கள் எடுத்தால் மட்டும் போதாது! பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கணும்! தமிமுன் அன்சாரி பளிச்!
ராமநாதபுரம்: மதிப்பெண்கள் மட்டுமே அறிவை தீர்மானிப்பது இல்லை என்றும் மாணவர்கள் தாங்கள் பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் உயர வேண்டும் எனவும் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அட்வைஸ் வழங்கியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் பயிற்சி முகாமில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

மேலும், அந்த நிகழ்வில் தமிமுன் அன்சாரி பேசியதாவது;
''இன்றைய மாணவர்களிடம் எதற்காக படிக்கிறாய்? எனக் கேட்டால், பணம் சம்பாதிக்க என்றும் வீடு- வாசல் வாங்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் சென்று வாழ வேண்டும் என்றும் பதில் தருகிறார்கள்.
அந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும். நாம் கற்கும் கல்வி என்பது நேர்மை, சேவை, பொது முன்னேற்றம் என்ற அனைத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
நமது கல்வி என்பது நாம் படித்த பள்ளி, குடும்பம், ஊர் ஆகியவற்றுக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். நல்ல கல்வி என்பது ஒழுக்கத்துடன் கூடியதாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் இதை விட தரமான கல்வி தரப்படுகிறது. ஆனால் அங்கு ஏன் வகுப்பறையில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது? ஏன் சொல்ல முடியாத விபரீதங்கள் நடக்கின்றன.? அங்கு கல்வியுடன் பண்பு, ஒழுக்கம் சொல்லித் தரப்படுவதில்லை. அதுதான் காரணம்.
எனவே நமது பிள்ளைகளுக்கு வாழ்வின் அர்த்தங்களையும், பொது நலனையும் சொல்லிக் கொடுத்து பழக்க வேண்டும். தேர்வில் சக மாணவனின் பேனா மை தீர்ந்து எழுதவில்லை எனில் தன்னிடமுள்ள இன்னொரு பேனாவை கொடுத்து உதவ வேண்டுமென சொல்லி கொடுங்கள்.
தனது சக மாணவன்- மாணவி வறுமையின் காரணமாக தேர்வு கட்டணம் கட்டவில்லை எனில், எல்லோரும் சேர்ந்து அவருக்கு உதவ வேண்டுமென சொல்லிக் கொடுங்கள்.
புத்தகங்களுக்கு வெளியையும் வாழ்க்கை உள்ளது என புரிய வையுங்கள். 90% மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மட்டுமே அறிவாளி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் மதிப்பெண்கள் மட்டுமே அறிவை தீர்மானிப்பது இல்லை.
சராசரி மதிப்பெண்களை எடுத்தவர்கள்தான் பெரும்பாலும் வாழ்வின் உயரங்களை எட்டி சாதிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது.
B.com, computer science, MBA என்ற படிப்புகளை மட்டுமே பெரும்பாலான பலர் தேடுகிறார்கள். சட்டம், அரசியல், அறிவியல், வரலாறு என இதர படிப்புகளையும் நோக்கி சிந்திக்க வேண்டும்.
பெண்கள் திருமணத்திற்கு பிறகும் பயன்படும் வகையில் தங்கள் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். கற்றலுக்கு வறுமை என்பது தடையல்ல.
மார்ட்டின் லூதர் கிங் கூறியதை கேளுங்கள். பறக்க முயற்சி செய், இல்லாவிடில் ஓடு. ஓட முடியாவிட்டால் நட. அதுவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல், எந்த நிலையிலும் முன்னேறிக்கொண்டே இரு.இதனை மனதில் கொண்டு இயங்குங்கள்.''












Click it and Unblock the Notifications