கலவரத்தை விரும்பக்கூடிய கட்சியல்ல பாஜக.. இது எங்கள் சித்தாந்தத்திற்கு எதிரானது.. அண்ணாமலை கருத்து!
ராமநாதபுரம்: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியது மிகவும் தவறானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையம் வந்த லட்சுமணின் உடலுக்கு, தமிழக அரசு சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.

செருப்பு வீசிய பாஜக
அப்போது ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய பின்னர், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டபோது, பாஜகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை வீசினார்.

இதுவரை 7 பேர் கைது
இதுதொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் நேற்று இரவு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டிற்கு நேரில் சென்று மன்னிப்பு கோரினார். பின்னர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணாமலை கருத்து
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், பாஜக எப்போதும் அமைதியை விரும்பக்கூடிய கட்சி. கலவரத்தை விரும்பக்கூடிய கட்சி கிடையாது. அதேநேரத்தில் நேற்று மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பொதுமக்களிடம் பேசிய வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது.

மிகவும் தவறானது
ஆனால் அமைச்சரின் கார் மீது காலணி வீசியது விரும்பத்தகாத சம்பவம். மிகவும் தவறானது. மேலும் இச்சம்பவம் நேற்று நடந்திருக்க கூடாது. நான் அரைமணி நேரம் முன் மதுரை விமான நிலையத்திற்கு சென்றிருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. நேற்று நடந்த இச்சம்பவம் கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திற்கு எதிரானது. அதே நேரத்தில் காவல்துறை கைது செய்துள்ள நபர்களில் சில அப்பாவிகள் உள்ளனர். அவர்கள் அந்த இடத்தில் இல்லாதவர்கள்.
Recommended Video

சட்டப்படி நடவடிக்கை
தவறு யார் செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மேலும் கட்சி தொண்டர்கள் அனைத்திற்கும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அதேபோல் மதுரை மாவட்ட பாஜக தலைவர் தன் தாய் கழகத்திற்கு செல்வதாக கூறியது அவர் உரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது. அவர் சென்றால் மற்றொருவர் அப்பதவிக்கு அமர்த்தப்படுவார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications