ராமநாதபுரத்தில் அதிமுக களமிறக்கும் வேட்பாளர் யார்? சீட் ரேஸில் முந்தும் கீர்த்திகா முனியசாமி!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி யாரை களமிறக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அம்மாவட்ட அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை மீனவர்கள், சிறுபான்மையினர், முக்குலத்தோர் உள்ளிட்ட சமுதாயத்தினர் அடர்த்தியாக வாழும் பகுதியாகும். இலங்கை கடற்படையால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ள நிகழ்வாகும். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, திருச்சுழி, அறந்தாங்கி, என மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த இந்த தொகுதியானது 98க்கு பிறகு திமுக, அதிமுக, என மாறி மாறி வெற்றி பெற்று வருகிறது. இதனிடையே ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்ற தகவல் உலா வரும் நிலையில் அதனை பாஜக மேலிடம் இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்தச் சூழலில் பாஜகவுடனான கூட்டணி உறவை முறித்துக்கொண்டுள்ள அதிமுக, வரும் தேர்தலில் ராமநாதபுரத்தில் நேரடியாக களமிறங்கும் திட்டத்தில் உள்ளது. அன்வர் ராஜா மீண்டும் சீட் எதிர்பார்த்தாலும் அவருக்கான வாய்ப்பு குறைவு எனத் தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமியின் மனைவியும், அதிமுக மகளிரணி மாநில இணைச் செயலாளருமான கீர்த்திகாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஏற்கனவே முதுகுளத்தூர் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இப்போதே தொகுதி முழுவதும் பூத் கமிட்டி பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வரும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி, களப்பணிகளை கிளைக்கழகம் வரியாக ஆரம்பித்துவிட்டார். திமுகவும் பதிலுக்கு ஃபீல்டு ஒர்க்கை தொடங்கிவிட்டது. இதனால் இந்த முறை போட்டி சற்று கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications