இந்தியாவுக்கு விலக்கு? பாகிஸ்தானை தாக்கினால் திருப்பி அடிப்போம்.. சவுதியின் ஸ்கெட்ச்சில் 2 நாடுகள்
ரியாத்: சவுதி அரேபியாவும், பாகிஸ்தானும் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் போட்டுள்ளது. பாகிஸ்தான் - சவுதி அரேபியா என யார் மீது தாக்குதல் நடத்தினால் அது தங்களின் மீதான தாக்குதலை நினைத்து பதிலடி கொடுக்கப்படும் என்பது தான் அந்த ஒப்பந்தம். இதனால் தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது.இனி பாகிஸ்தானை நாம் தாக்கினால் சவுதி அரேபியா நமக்கு எதிராக பாகிஸ்தான் பக்கம் நிற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதுபற்றி சவுதி அரேபியா அதிகாரி முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவுக்கு சென்றார். சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் (Strategic Mutual Defence Agreement) என அழைக்கப்படும் டீல் இருநாடுகள் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தான் இன்று காலை முதல் பேசும் பொருளாக உள்ளது.
ஒப்பந்தத்தின் பின்னணி
இந்த ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் மீதான எந்தவொரு தாக்குதலும் சவுதி அரேபியா தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும். அதேபோல் சவுதி அரேபியா மீதான எந்தவொரு தாக்குதலையும், பாகிஸ்தான் தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும். சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். இந்த ஒப்பந்தம் தான் பேசும் பொருளாகி உள்ளது.
இந்தியாவுக்கு சிக்கல்?
அதாவது பாகிஸ்தான் நம்மிடம் வாலாட்டும்போது நாம் பதிலடி கொடுப்போம். அப்படியென்றால் இனி பாகிஸ்தானை நாம் அடித்தால் நமக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவுதி அரேபியா களமிறங்கும். இதனால் நம் நாட்டுக்கு சிக்கல் வரும் என்ற தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்த கேள்விகள் இப்போது அனைவரிடமும் எழுந்துள்ளது. ஏனென்றால் சவுதி அரேபியாவுக்கும் நமக்கும் நல்ல உறவு உள்ளது. இந்த உறவை தாண்டி பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு சவுதி அரேபியா உதவி செய்யுமா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக வந்துள்ளது.
சவுதி அரேபியா தந்த விளக்கம்
இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛ இந்த ஒப்பந்தம் என்பது குறிப்பிட்ட நாடுகளுக்கோ அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளையோ மையப்படுத்தியது அல்ல. இந்தியாவுடன் எங்களின் உறவு நன்றாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வலுவானதாக இருக்கிறது. இந்த உறவை நாங்கள் தொடர்ந்து வளர்ப்போம். மேலும் எங்களால் முடிந்த அளவுக்கு பிராந்திய அமைதிக்கு பங்களிப்பு செய்ய முயற்சிப்போம்'' என்றார்.
இதன்மூலம் நம் நாட்டுடன் நல்ல உறவு இருப்பதால் பாகிஸ்தானுடன் மோதல் ஏற்படும்போது அமைதிக்கு வழிவகுப்போம் என்று மட்டுமே சவுதி அரேபியா தெரிவித்துள்ளார். மாறாக பாகிஸ்தான் பக்கம் நிற்போம். இந்தியாவை தாக்குவோம் என்று சவுதி அரேபியா சொல்லவில்லை. இது நம் நாட்டுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் சவுதி இந்தியாவை தொடாது என்பதற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன.
சவுதி - இந்தியா வர்த்தகம்
இதுபற்றி சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகையில், ‛‛பாகிஸ்தானுக்காக இந்தியாவை ஒருபோதும் சவுதி அரேபியா பகைக்காது. ஏனென்றால் இருநாடுகள் இடையே நல்ல வர்த்தக உறவு உள்ளது. எந்த காரணம் கொண்டும் சவுதி அரேபியா இதனை இழக்க விரும்பாது'' என்று கூறியுள்ளனர். அதாவது கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் 4வது பெரிய வர்த்தக பார்ட்னராக சவுதி அரேபியாவும், சவுதி அரேபியாவுக்கு 2வது பெரிய வர்த்தக பார்ட்னராக இந்தியாவும் இருந்தது.
இருநாடுகள் இடையே மொத்தம் 41.88 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இந்திய மதிப்பில் கூற வேண்டும் என்றால் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 957 கோடியாகும். இதனை உணர்ந்து தான் சவுதி அரேபியாவும் சர்வதேச அரசியல் நிபுணர்களும் இப்படி கூறியுள்ளன.
ஸ்கெட்ச் இஸ்ரேலுக்கு தான்
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். பாகிஸ்தானை நாம் தானே அடிக்கிறோம். அதில் சவுதி அரேபியா தலையீடு செய்யாவிட்டால் எதற்காக இந்த ஒப்பந்தம்.. இந்தியாவிடம் இருந்து தங்களை காப்பாற்ற சவுதி அரேபியா காப்பாற்ற வராவிட்டால் பாகிஸ்தானுக்கு என்ன லாபம் என்று உங்களுக்கு கேள்விகள் வரலாம். அதற்கும் விடை உள்ளது.
அது தான் இஸ்ரேல். இஸ்ரேல் என்பது பாகிஸ்தான் - சவுதி அரேபியா என இருநாடுகளுக்கும் எதிரியாக உள்ளது. பாகிஸ்தான் இன்னும் இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்கவே இல்லை. சவுதி அரேபியாவோ, காசா மீதான போர் காரணமாக இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் பொது எதிரி இஸ்ரேல்.
இஸ்ரேல் ஆதிக்கத்தை தடுக்க..
சமீபத்தில் இஸ்ரேல் கத்தார் மீது தாக்குதல் நடத்தியது. காசாவின் ஹமாஸ் தலைவர்கள் கத்தார் தோஹாவில் இருப்பதை காரணம் காட்டி இஸ்ரேல் தாக்கியது. காசாவில் போருக்கு மத்தியில் இஸ்ரேல் மத்திய கிழக்கில் உள்ள ஈரான்ர், லெபனான், சிரியாவை தொடர்ந்து கத்தாரை தாக்கியது.
அதுபோன்ற தாக்குதல் வரும் நாட்களில் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இதனை தடுக்கவே பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் இந்த டீலில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலிடம் அணு ஆயுதம் உள்ளது. பிற இஸ்லமிய நாடுகளிடம் அணுஆயுதம் இல்லை. இஸ்லாமிய நாடுகளிலேயே பாகிஸ்தானிடம் தான் அணுஆயுதம் உள்ளது. சவுதி அரேபியாவும் பாகிஸ்தானின் அணுஆயுத திட்டத்தில் இணைய நீண்ட காலமாக விருப்பம் தெரிவித்தது. அதன் ஒருபகுதியாக தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏமன் ஹவுதிகளுக்கு பதிலடி
அதேபோல் இன்னொரு முக்கிய விஷயமும் உள்ளது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கும், சவுதி அரேபியாவுக்கும் நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஹவுதிகள் அவ்வப்போது சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்துகின்றனர்.
இது சவுதி அரேபியாவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கும் முடிவு கட்ட வேண்டி உள்ளது. இதனால் வரும் காலத்தில் சவுதி அரேபியாவை ஹவுதிகள் தாக்கினால் பாகிஸ்தான் ராணுவத்தை வைத்து எளிதாக பதிலடி கொடுக்க முடியும் என்று சவுதி அரேபியா கணக்கிட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
சவுதியின் மாஸ்டர் பிளான்
இதன்மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்குவதை விட சவுதி அரேபியா தனது நாட்டை இஸ்ரேல் மற்றும் ஹவுதிகளிடம் இருந்து பாதுகாப்பதை மனதில் வைத்தே இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்த்தின் அடிப்படையில் சவுதி அரேபியா ஒருபோதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவை எதிர்க்காது.. சீண்டாது எனசர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications