இது என்ன சவுதிக்கு வந்த சோதனை.. கைவிடப்படும் இளவரசர் பின் சல்மானின் "தி லைன்"? திடீர் எச்சரிக்கை
ரியாத்: சவுதியின் கனவுத் திட்டமான தி லைன் திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஏற்கனவே நிதி உட்பட பல்வேறு சிக்கல்களால் இந்த திட்டம் சவால்களை சந்தித்து வரும் சூழலில், இப்போது காலநிலை ஆய்வாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் அது அப்பகுதியில் நிலவும் கிளைமேட்டையே மொத்தமாக மாற்றும் என்ற எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே சவுதி அரேபியாவும் கச்சா எண்ணெய்யை நம்பியே இருக்கிறது. அதன் பொருளாதாரமும் கச்சா எண்ணெய்யைச் சுற்றியே அமைந்துள்ளது. ஆனால், வரும் காலத்தில் கச்சா எண்ணெய்க்கான தேவை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் சவுதி இறங்கியுள்ளது.

தி லைன்
குறிப்பாகச் சுற்றுலா மற்றும் பிஸ்னஸ் துறைகளில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. அதில் ஒன்று தான் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் கனவுத் திட்டமான நியோம் நகரம். தி லைன் என்ற திட்டத்தின் கீழ் மிகப் பெரிய நகரத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.
மற்ற நகரங்களுக்கும் இந்த நியோமிற்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது. அதாவது இந்த நகரம் நேர்கோட்டில் ஒரே ஒரு சாலையை மட்டுமே கொண்டதாக இருக்கும். அந்த சாலைக்கு இரண்டு புறங்களிலும் கட்டிடங்கள், குடியிருப்புகள் இருக்கும். கூடுதல் சாலைகள் எதுவும் இல்லாமல் ஒரே ஒரு சாலை மட்டுமே இருக்கும் என்பதே இதன் சிறப்பம்சம் ஆகும். முகமது பின் சல்மானின் கனவுத் திட்டமான இது கார்பன் வெளியேற்றம் இல்லாத நகரமாகத் திட்டமிடப்பட்டு வருகிறது.
எதிர்ப்புகள்
இதற்கிடையே இத்திட்டத்திற்கு இப்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த லைன் நகரம் நிலவும் வானிலையைக் கூட மொத்தமாக மாறும் என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது புயல்களின் பாதையை மாற்றக்கூடும் என்றும் இதனால் பல்வேறு இயற்கை பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.
இது தொடர்பாக இல்லினாய்ஸ் பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர் டொனால்ட் வூபிள்ஸ் கூறுகையில், "500 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தத் திட்டம் பிரம்மாண்டமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இது அந்த பிராந்தியத்தின் சுற்றுச்சூழலை மிகக் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக இங்கு நிலவும் வானிலையைக் கூட மொத்தமாகப் பாதிக்க ஆரம்பிக்கும்" என்றார்.
இந்த வூபிள்ஸ் தி லைன் திட்டத்திற்கு ஆலோசகராகச் செயல்பட்டவர் என்பதால் அவரது கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது. இவர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இந்தத் திட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சவுதி இந்தத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
தி லைன் என்றால் என்ன
அதேநேரம் ஏற்கனவே இந்த திட்டம் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. பெரும்பாலான வல்லுநர்கள் இந்த லைன் திட்டத்தைச் சாத்தியப்படுத்தவே முடியாது என்கிறார்கள். முதலில் இத்திட்டத்தின் கீழ் 170 கிமீ தொலைவுக்குச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதன் இரு புறங்களிலும் முழுக்க முழுக்க வானுயர்ந்த கட்டிடங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
ஏகப்பட்ட சிக்கல்கள்
ஆனால், இது பல்வேறு டெவலப்பர்களுக்கு பெரும் சவாலாக மாறியது. பலரும் திட்டத்தில் இருந்து பேக் அடித்தனர். இதனால் திட்டத்தைச் சுருக்கி முதற்கட்டமாக 2030க்குள் 16 கி.மீ தூரம் தொலைவுக்கு மட்டும் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதுவும் கூட முடியாது என்பதால் பிறகு அது 2.4 கி.மீ ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால், அதிலும் கூட தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலை வைத்துப் பார்த்தால் 2034ஆம் ஆண்டுக்குள் ஒரு ஸ்டேடியம் உட்பட 0.5 மைல் தொலைவுக்கு மட்டுமே கட்டி முடிக்கப்படும் நிலை உள்ளது.
இருபுறத்திலும் சுமார் 1,640 அடி உயரத்திற்குக் கட்டிடங்களைக் கட்ட பின் சல்மான் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்தளவுக்கு உயரத்தில் கட்டிடம் கட்டுவது சிரமமாகவும் அதிக செலவு வைப்பதாகவும் இருக்கும் என்பதால் அதை 1,000 அடியாகக் குறைக்க வல்லுநர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், முகமது பின் சல்மான் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதுபோல ஏற்கனவே பல குழப்பங்கள் லைன் திட்டத்தில் உள்ள நிலையில், இப்போது வானிலையே கூட மொத்தமாக மாறும் என்ற புகார்கள் கிளம்பியுள்ளன. இதனால் தி லைன் திட்டம் முடியுமா என்பதிலேயே கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications