"வார்னிங்.." சவுதி அரேபியாவில் இடி மின்னலுடன் கொட்ட போகுது கனமழை.. பொதுமக்களுக்கு பரபர அலர்ட்
ரியாத்: சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளிலும் நாளை புதன்கிழமை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
பாலைவன நாடான சவுதியில் ஆண்டின் பெரும்பாலான காலம் வெயில் தான் அதிகமாக இருக்கும்.. ஒரு ஆண்டிற்கு சில செமீ மழை தான் பெய்யும். ஆனால் இந்தாண்டு அங்கு நிலைமை நேர்மாறாக இருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐக்கிய அமீரகம், சவுதி உள்ளிட்ட நாடுகளில் நல்ல மழை பெய்தது. இதனால் சில இடங்களில் வெள்ளம் கூட ஏற்பட்டது. இதற்கிடையே சவுதிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை: அதன்படி சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளிலும் நாளை புதன்கிழமை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. மழை தீவிரமானதாக இருக்கலாம் என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இஸ்லாமியர்களின் புனித தளமான மக்கா பகுதியில், மிதமான முதல் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் திடீர் வெள்ளம், ஆலங்கட்டி மழை மற்றும் மணல் புயல்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைஃப், மெய்சான், ஆதம், அல் அர்தியத் மற்றும் அல் கமில் உள்ளிட்ட பகுதிகள் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மக்கா மற்றும் அருகிலுள்ள பகுதிகளான ஜும்ம், பஹ்ரா, ரனியா, குர்மா மற்றும் மோயா போன்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் மழை பெய்யும்: சவுதி தலைநகர் ரியாத் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் இதனால் திடீர் வெள்ளம், ஆலங்கட்டி மழை மற்றும் மணல் புயல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அஃபிஃப், தவாத்மி, குவையா, மஜ்மா, அல் காட், ஷக்ரா, அஸ் சுல்பி, தாடிக், முராத் மற்றும் வாடி அல் தவாசிர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜசான், ஆசிர் மற்றும் அல் பஹா பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதேபோல ஜசான், மதீனா, ஹைல் மற்றும் காசிம் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: மழை அதிகம் பெய்யும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் இந்த மோசமான வானிலையின் போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் நீர் தேங்கக்கூடிய இடங்களிலிருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications