வீரபாண்டி ராஜாவுக்கு பாஜக அழைப்பு...? அதிருப்தி திமுக பிரமுகர்களுக்கு தொடரும் தூது விடும் படலம்
சேலம்: திமுகவில் அதிருப்தியில் உள்ள பிரமுகர்களை வளைக்க பாஜக தரப்பில் முழு வீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேச்சுவார்த்தை உள்ளிட்ட எந்த ஒரு தகவலும் இறுதிநிமிடம் வரை ஊடகங்களுக்கு கசியாத வண்ணம் கணக்கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறது பாஜக மாநில தலைமை.
இதனிடையே திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ள வீரபாண்டி ராஜாவை பாஜகவுக்கு அழைத்துச் செல்வதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.
அடுத்தடுத்து பாதிப்படையும் எம்எல்ஏக்கள்.. பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா
வீரபாண்டி குடும்பம்
சேலம் மாவட்ட திமுக என்றாலே அனைவரது நினைவுக்கு வருபவர் வீரபாண்டி ஆறுமுகம். கட்சியை வலிமையோடு வழிநடத்தி வந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த பின்னர் சேலம் திமுகவில் கோஷ்டிப் பூசல்கள் தலைதூக்கின. பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் அணிக்கும் வீரபாண்டியார் தரப்பினருக்கும் ஏழாம் பொருத்தம் இருந்து வரும் நிலையில், புதிதாக செல்வகணபதி கோஷ்டியும் கோதாவில் குதித்துள்ளது. இப்படி ஆளுக்கொரு கோஷ்டியாக முறுக்கிக் கொண்டு நிற்கிறது சேலம் திமுக.
வீரபாண்டி ராஜா
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பின்னர் திமுகவில் சில அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார் மு.க.ஸ்டாலின். நாமக்கல் காந்திச்செல்வன், சேலம் வீரபாண்டி ராஜா, பொள்ளாச்சி தமிழ்மணி, என பல மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை பறித்தார். இதில் அப்செட்டான வீரபாண்டி ராஜா பாமகவுக்கு செல்லவுள்ளதாக அப்போது தகவல்கள் வட்டமடித்தன. ஆனால் அதனை மறுத்து திமுகவிலேயே தேர்தல் பணிக்குழுவில் தொடர்கிறார்.
பாஜக தூது
திமுக தலைமை மீது வீரபாண்டி ராஜா அதிருப்தியில் இருப்பதை அறிந்த பாஜக அவருக்கு தூது விட்டுள்ளது. ஆனால் அதற்கு வீரபாண்டி ராஜாவிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. காரணம் மறைந்த தனது தந்தை வீரபாண்டி ஆறுமுகத்திற்கு தன்னால் எந்த ஏச்சு பேச்சும் வந்துவிடக் கூடாது என்பது தானாம். மேலும், ராஜாவின் ஆதரவாளர்களும் சில காலம் பொறுமை காக்கும் படி அவரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
எதிர்பார்ப்பு
மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டவுடன் ஸ்டாலினை சந்திக்க மறுத்த வீரபாண்டி ராஜாவை கே.என்.நேரு தான் சமாதானம் செய்து பொறுமையாக இரு சூழல் மாறும் என சமாதானம் செய்தார். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது கொண்ட மரியாதை காரணமாக நேரு இந்தளவிற்கு இறங்கி வந்தார். இதனிடையே தங்கள் அழைப்புக்கு வீரபாண்டி ராஜாவிடம் இருந்து பாசிட்டிவ் பதில் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளது பாஜக தரப்பு.