சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழாவின்போது பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் சிதிலமடைந்த நிலையில் அதை ஒட்டி கடைகள் கட்டப்பட்டு இருப்பதையும், வடக்கு திசையில் உள்ள வாயில் குறுகலாக இருப்பதையும், பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டி கோட்டை மாரியம்மனின் பக்தரான சேலம் மேட்டு அக்ரகாரத்தை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் 2019ஆம் ஆண்டு தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை, கோவில் நிர்வாகம் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி இருந்தார்.

இந்த கோவிலுக்கு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவிற்காக கோவிலின் திருப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை தன் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு நீதிபதி P.D.ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கோவிலை சுற்றி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சீரற்ற வகையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் எளிதாக வந்துசெல்வதற்கு இடையூறாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில் அறநிலையத்துறை கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் சிரமமின்றி பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில், தேவைப்படும்பட்சத்தில் கோவிலை சுற்றியுள்ள கடைகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் உதவி ஆணையர் ஆகியோருடன் ஆலோசித்தும், நேரில் ஆய்வு செய்தும் பக்தர்கள் கோவிலுக்குள் சிரமமின்றி சென்று வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் செயல் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட்டு, அதுதொடர்பான அறிக்கையை நவம்பர் 7ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications