நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்! திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்!
சேலம்: சேலம் மாவட்ட திமுகவில் கோஷ்டிப் பூசல்கள் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், மாவட்டத்தில் நடக்கும் அரசியலை தாம் கண்காணித்துக் கொண்டு தான் இருப்பதாக கூறியிருக்கிறார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.
அதுவும் அறைக்குள் வைத்தோ, நான்கு பேருக்கு மத்தியில் வைத்தோ இதனை கூறாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் பொதுக்கூட்ட மேடையில் வைத்தே இதனைக் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
வக்கீல் ராஜேந்திரன், எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி, வீரபாண்டி பிரபு, பார்த்திபன் எம்.பி. என சேலம் மாவட்ட திமுகவில் பல அணிகள் இருந்து வருவது புதிதல்ல.
இதனிடையே சேலம் ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் சேலம் மாவட்ட திமுக பற்றி ஸ்டாலின் கூறியதாவது;

அமைச்சர் நேரு
''சேலம் மாவட்டத்துக்கு நேரு அவர்களை அனுப்பி வைத்தாலும் - அவரிடம் நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பேன். சேலத்தை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் எவ்வளவு சுறுசுறுப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதை அவர் தொடர்ந்து என்னிடத்தில் சொல்லி வந்திருக்கிறார்.''

முப்படைத் தளபதிகள்
''மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆகிய மூவரும் மாவட்டத்தை வழிநடத்துபவர்களாக மட்டுமல்லாமல் - இந்த சேலம் மாவட்டத்தின் முப்படைத் தளபதிகளைப் போலச் செயல்பட்டு வருவதை நான் அறிவேன்.''

நான் கண்காணிக்கிறேன்
''அதே நேரத்தில் நான் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன். உங்கள் மூவரின் செயல்பாடும் - சேலம் மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் வெற்றி முகட்டில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. எல்லாவற்றிற்கும் மேல், இது சாதாரண மாவட்டம் அல்ல - வீரபாண்டியார் மாவட்டம்! அதையும் மறந்துவிட முடியாது.''இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

நேரு வருகை
சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக கே.என்.நேருவை நியமித்த பிறகு, அந்த மாவட்ட திமுக நிர்வாகிகளை டிரில் எடுத்து வருகிறார். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பதற்கேற்ப அமைச்சர் நேரு இடும் கட்டளையை ஏற்று கப்சிப் என கட்சிப் பணியாற்றி வருகின்றனர் மாம்பழ நகர உடன்பிறப்புகள்.
காரணம் கட்சியினரின் உழைப்புக்கேற்ற பலனை கொடுப்பதில் அமைச்சர் நேரு தாராளம் காட்டுவதே ஆகும்.












Click it and Unblock the Notifications