மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க அதிகாரி.. சங்க அலுவலகத்தை பூட்டி போராட்டம்! எடப்பாடி அருகே பரபரப்பு
சேலம் : எடப்பாடி அருகே, கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த நகைகளை ஊழியர்கள் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி, வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட வெள்ளரி வெள்ளி ஊராட்சி பகுதியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இதன் தலைவராக அதே பகுதியைச் சேர்ந்த சத்தியபானு இருந்து வருகிறார். அச்சங்கத்தில் செயலாளராக இருந்த வேப்பமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தில் நிதி முறை கேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் விசாரணையில் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்த மோகன் கடந்த ஜனவரி மாதம் வரை, பயிர் கடன், நகைக் கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்டவற்றில் சுமார் 3 கோடியே 52 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவர் மீது தொடந்து புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில், மோகன் மற்றும் முறைகேட்டில் தொடர்புடைய பிற அலுவலர்கள் குறித்து கூட்டுறவுத் துறை உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் முன்பு திரண்ட அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் கூட்டுறவுச் சங்கத்தில் அடகு வைத்திருந்த நகை, மற்றும் ஈட்டு வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாக தங்களுக்கு திருப்பித் தரக்கோரி கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான கதவை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட நபர்களிடம் சங்கத்தின் பொறுப்பு செயலாளர் மணி மற்றும் பூலாம்பட்டி போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்கள் கூட்டுறவுச் சங்க கட்டடத்தை பூட்டி முற்றுகையிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications