அதிமுக- பாஜக கூட்டணி...அண்ணாமலை முடிவெடுக்க முடியாது- டெல்லிதான் இறுதி செய்யும்- இபிஎஸ் 'பொளேர்'
சேலம்: அதிமுக, பாஜக கூட்டணி குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு எடுக்க முடியாது; டெல்லியில் உள்ள தேசிய தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் தமது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக அதிமுக, பாஜக தலைவர்களிடையே கடும் கருத்து மோதல்களும் உருவாகின.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக சட்டப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி ஒன்றில் திட்டவட்டமாக கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்திருந்தார்.
ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டியில் அதிமுகவுடனான கூட்டணி குறித்து சர்ச்சையை கிளப்பிவிட்டிருந்தார். அதாவது அதிமுகவுடனான கூட்டணியில் இருக்கிறோம் என்றுதான் அமித்ஷா கூறினார். அதிமுகவுடன் இனியும் கூட்டணி தொடரும் என அமித்ஷா உறுதி செய்யவில்லை. அமித்ஷாவுடன் 2004 லோக்சபா தேர்தல், 2006 சட்டசபை தேர்தல் குறித்து 2 மணிநேரம் ஆலோசித்தோம். அமித்ஷா என்ன சொன்னார் என்பதை புரிந்து கொள்ள இந்தி தெரிந்து இருக்க வேண்டும். தற்போதைய நிலையில் லோக்சபா தேர்தலுக்கு அதிமுகவுடனான கூட்டணியை அமித்ஷா இறுதி செய்யவில்லை. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியம் என்பது கிடையாது.

அமித்ஷாவின் பேச்சில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அவர்களுடைய முடிவே இறுதி முடிவு. எனக்கு யார் மீதும் எந்த கோபமும் இல்லை. பாஜக தனித்துப் போட்டியிடும் என நான் எங்கேயும் கூறவில்லை. டெல்லி தலைமைதான் இறுதி முடிவை எடுக்கும் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சியில் இணைவது என்பது ஜனநாயகத்தில் உள்ள உரிமை. இது கூட்டணி விவகாரங்களைப் பாதிக்கக் கூடாது.

அதிமுக- பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் டெல்லியில் உள்ள தேசியத் தலைவர்கள்தான். அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக ஜேபி நட்டா உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மாநில தலைவர்களால் அதிமுக பாஜக கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாது. டெல்லியில் உள்ள தேசியத் தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். டெல்லியில் உள்ள தலைவர்கள், அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என ஏற்கனவே சொல்லிவிட்டனர். இவ்வாறு எடபாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications