சேலம் மாவட்டத்தில் 100 % வெற்றி பெறவேண்டும்... சொந்த மாவட்டம் என்பதால் முதல்வர் கறார்
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு, நிர்வாகிகள் கடுமையாக உழைக்கவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் தனது சொந்த மாவட்டம் என்பதால் அதில் தனது பலத்தையும், செல்வாக்கையும் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த மக்களவைத் தேர்தலில் கோட்டைவிட்டது போல் இந்த முறை விட்டுவிடக் கூடாது என்பதில் சேலம் மாவட்ட அதிமுகவினர் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
மிக கவனம்
தமிழகம் முழுவதும் வரும் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதற்கான பணிகளில் அதிமுக முழுவீச்சில் இறங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் அஜாக்கிரதையாக இருந்ததைப் போல் இப்போது இருக்கக் கூடாது என்பதில் அதிமுக தலைமை மிக கவனமாக உள்ளது.
Exclusive: உபதேசம் கூற ரஜினிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை... வேல்முருகன் விளாசல்
100 % வெற்றி
சேலம் தனது சொந்த மாவட்டம் என்பதால் அங்கு தப்பித்தவறி கூட தோல்வியடைந்து விடக் கூடாது என நினைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனால் 100 % ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து ஒன்றியங்களிலும் அதிமுக பெருவாரியாக வெற்றிபெற வேண்டும் என பல்வேறு வியூகங்கள் வகுத்து அதை செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.
அறிவுறுத்தல்
தேர்தல் பணிகளில் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்றும், களப்பணியாற்றாதவர்கள் மீது தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை பாயும் என்றும் நிர்வாகிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாராம். இதனால் முதல்வரின் குட்புக்கில் இடம்பெறுவதற்காக சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளனர்.
கோஷ்டிப்பூசல்
இந்நிலையில் திமுக தரப்பில் தேர்தல் பணிகள் எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பது பற்றி நாம் விசாரித்ததில், சற்று சுணக்கம் காணப்படுவதாகவும், காரணம் சேலம் மாவட்டத்தில் காலம் காலமாக தொடரும் கோஷ்டிப்பூசல் தான் என்றும் கூறப்பட்டது.