அரசியல்வாதிகள் கத்துக்கணும்.. குழந்தைக்கு பெயர் வைப்பதில் எடப்பாடி செய்த புத்திசாலித்தனம்
சேலம்: தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு தாய் ஒருவர் கேட்ட போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் தெரியுமா? அவரது இந்த செயலை மற்ற அரசியல்வாதிகளும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள் நம் ஊருக்கு வந்தால் அவர்களிடம் தனது குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி கேட்பது டிரென்டாகி வருகிறது. இதைத் தான் கவுண்டமணி தனது படத்தில் காமெடியாக கொண்டு வந்திருப்பார்.

கவுண்டமணியிடம் பெயர் வைக்குமாறு ஒருவர் குழந்தையை தூக்கி வர அவர் முருகேசன் என பெயர் வைப்பார். உடனே அதன் பெற்றோர் ஏங்க இது பெண் புள்ளங்க என கூறிய போது ஏன்டா ஜட்டியை கழற்றிவிட்டு கொடுக்க மாட்டீங்களா என கேட்டபடியே சரி முருகேசி என வை என்பார்.
இது காமெடிக்காக வைக்கப்பட்டாலும் பெண் குழந்தையை எப்படி முருகேசி என அழைப்பது. என்னதான் இந்த காமெடி சிரிக்க வேண்டியதாக இருந்தாலும் இதில் நிறைய சிந்திக்க வேண்டியது இருக்கிறது. ஒரு குழந்தை கருவாக இருக்கும் போதே சிலர் ஆணாக இருந்தால் இந்த பெயரும் பெண்ணாக இருந்தால் இந்த பெயரும் வைக்கலாம் என தீர்மானித்திருப்பர்.
அதன்படி குழந்தைக்கு பெயர் வைக்க விரும்புவர். ஆனால் சிலர் தங்களது ஆதர்ஷ அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் நம் ஊருக்கு வந்துவிட்டால் அவர்களை சந்திக்கும் சாக்கில் நம் குழந்தைக்கு பெயர் வைக்க கேட்பர். அதிலும் அரசியல்வாதிகளிடம்தான் நிறைய பேர் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி கேட்பர்.
அப்போது அவர்கள் ஏதோ ஒரு பெயர் வாய்க்கு வந்ததை வைப்பர், இல்லாவிட்டால் அவசரத்தில் தங்களுக்கு பிடிக்காத பெயரையே கூட வைத்துவிடுவர். சில அரசியல்வாதிகள் ஆண் குழந்தைக்கு பெண் பெயரையும் பெண் குழந்தைக்கு ஆண் பெயரையும் வைத்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு! அப்படியே அரசியல்வாதிகள் வைத்த பெயர் பல நேரங்களில் பெற்றோருக்கே பிடிக்காமல் இருக்கும்.
சரி நியூமராலஜியை பார்த்தால் அந்த அரசியல்வாதி வைத்த பெயர் நியூமராலஜிபடி இருக்காது. இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் இந்த பெயர் வைப்பதில் இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது எப்போதுமே பெற்றோரின் விருப்பமாகத்தான் இருக்க வேண்டும். அதற்கான முழு உரிமை பெற்றோரை தவிர வேறு யாருக்கும் இல்லை.
அதையும் மீறி எந்த பெற்றோராவது குழந்தை்கு பெயர் வைக்க அரசியல்வாதியிடம் கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்துள்ளார். இவர் செய்த சம்பவத்தை மற்ற அரசியல்வாதிகளும் கற்றுக் கொள்ள வேண்டும். எடப்பாடியில் எடப்பாடி பழனிசாமி பொதுக் கூட்டத்தை நடத்தினார்.
அப்போது கூட்டம் முடிந்த நேரத்தில் ஒரு பெண், குழந்தையுடன் வந்து எடப்பாடியிடம் "ஐயா இந்த குழந்தைக்கு ஒரு பெயர் வைங்க" என கேட்டார். அப்போது எடப்பாடி, என்ன பெயர் வைக்கலாம் நீங்களே சொல்லுங்க என கேட்க அதற்கு அந்த தாய் இல்லைய்யா நீங்களே வைங்க என சொல்ல, அதற்கு எடப்பாடி சும்மா சொல்லும்மா என கேட்கிறார். உடனே அந்த குழந்தையின் தாய் தயக்கத்துடனே சுதர்சனா என சொல்கிறார். எடப்பாடியும் 3 தடவை சுதர்சனா சுதர்சனா சுதர்சனா என அழைக்கிறார்.
இந்த தருணத்தில் எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. அந்த குழந்தையின் தாயிடம் என்ன பெயர் வைக்கலாம் என கேட்டவுடன் அவர் சற்றும் யோசிக்காமல் சுதர்சனா என்கிறார் என்றால் அவர் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருக்கிறார் என்றுதானே அர்த்தம். அந்த சூழலில் எடப்பாடி ஒரு பெயரை வைத்து அந்த பெயரை பிடிக்காமல் குழந்தை வைப்பதை விட இது போல் தாயிடமே அரசியல்வாதிகள் கேட்டு வைப்பது சிறப்பு.












Click it and Unblock the Notifications