ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அதிமுக வேட்பாளர் யார்? சேலத்தில் ஆலோசிக்கும் எடப்பாடி பழனிசாமி!
சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு, இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வந்த நொடி முதலே தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் திமுக கூட்டணி தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாய்ப்பு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது.
இதனால் திமுக கூட்டணி பக்கம் அமைதி காணப்பட்டாலும், அதிமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் பம்பரமாய் சுழன்று வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நேரடியாக களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது புதிராகவே உள்ளது.

பாமக ஆதரவு?
ஏனென்றால் பாஜக தனித்துப் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் இடைத்தேர்தலில் பாமக களமிறங்கவும் செய்யாமல், அதிமுகவுக்கு ஆதரவும் அளிக்காமல் அமைதி காக்கும் என்றும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அதேபோல் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு, அமமுக, தேமுதிக, மநீம ஆகிய கட்சிகளும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர் தேர்வு குறித்து முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி கருப்பண்ணன், சிவி சண்முகம், கேபி முனுசாமி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

கூட்டணி கட்சிகள் ஆதரவு
சேலம் நெஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதேபோல் நாளை பாஜக தலைவர்களுடனான சந்திப்பு குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இரட்டை இலை சின்னம் விவகாரம், கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கே.வி.ராமலிங்கம் போட்டி?
இதனிடையே அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சரான கே.வி.ராமலிங்கம் 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications