நாங்க ஊழல் கட்சின்னு அப்ப தெரியலையா? எந்த நேரமும் பொய்.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய எடப்பாடி!
சேலம்: அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி எனக் கூறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, இந்த விஷயம் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போது தெரியவில்லையா? இதுதான் பாஜகவின் இரட்டை வேடம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுக தயவில் தான் பல மசோதாக்களை ராஜ்யசபாவில் நிறைவேற்றியது பாஜக என்றும் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அவர் பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரையும் திமுக அழைக்கவில்லை. ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், மத்திய அரசில் இருக்கும் தலைவர்களின் உதவி தேவை என்பதற்காகவும் பாஜகவை திமுக அழைத்துள்ளது. இதுபற்றி கேள்வி கேட்டால் இரண்டு கட்சிகளுக்கும் கோபம் வருகிறது.
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்தது. அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் தான் இருந்தது. மாநில அரசின் செயலாளர் பெயர் தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு நடத்தியதாக, முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்.
திமுக அரசை குற்றம்சாட்டினால், பாஜக மாநில தலைவர் என்னை குறை சொல்கிறார். அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி, மோசமான ஆட்சி எனச் சொல்கிறார் அண்ணாமலை. திமுகவை போல பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது. அதிமுக தயவில் தான் பல மசோதாக்களை ராஜ்யசபாவில் நிறைவேற்றியது பாஜக. மசோதாக்கள் நிறைவேறும்போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது அதிமுகவை பாஜக விமர்சிப்பது இரட்டை வேடம்.
10 ஆண்டுகளில் பாஜக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமை தான் அதிகரித்துள்ளது. ரூ.55 லட்சம் கோடியாக இருந்த மத்திய அரசின் கடன், 10 ஆண்டுகளில் ரூபாய் 168 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எம்ஜிஆரின் வரலாறு தெரியாமல் அவரை சிறுமைப்படுத்தி அண்ணாமலை பேசுகிறார். மத்திய அரசின் ஆட்சியாளர்கள் வந்து நாணயத்தை வெளியிட்டால் தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் என பாஜக கூறிக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் பற்றி அண்ணாமலை பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.
அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு என எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. புயல் வெள்ளம் வந்த போது நிதியை பெற்று தரவில்லை. பொய்களை மட்டுமே பேசுபவர் தான், தமிழக பாஜக தலைவராக உள்ளார். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் மட்டும் பாஜகவுக்கு தேவை; ஆனால் தமிழ்நாட்டுக்கான திட்டங்களை புறக்கணிப்பார்கள்.
திமுகவும், பாஜகவும் வெளியே மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் உள்ளே உறவாடி கொண்டிருக்கின்றனர். இதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.” என காட்டமாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications