சேலத்தில் கரும் பூஞ்சை தொற்று காரணமாக இளைஞரின் கண் அகற்றம்.. தீவிர சிகிச்சை
சேலம்: சேலத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த 26 வயது இளைஞரின் கண் அகற்றப்பட்டுள்ளது.
மியூ கோர்மைகோஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் என்பது பாக்டீரியா வைரஸ் போல காற்றிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகிறது. அவை மெல்ல மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன.
கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும் பின்னர் மூளைப்பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கண் பார்வை இழப்பு உறுப்புகள் பாதிப்பு உச்சபட்சமாக உயிரிழப்பு கூட நேரிடலாம்.
கரும் பூஞ்சை பாதிப்பு
தமிழகத்தில் சேலம், நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கரும் பூஞ்சை தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலத்தில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.சேலத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு அறிகுறிகளுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருந்து கிடைக்கவில்லை
சேலத்தை சேர்ந்த 26 வயது வாலிபர் கொரோனா தொற்று பாதித்து, குணமடைந்து வீடு திரும்பினார். சில நாட்களுக்கு முன்பு கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகள் அவருக்கு வந்துள்ளது. பின்னர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் இதற்கான மருந்துகள் தங்களிடம் இல்லை என்று வெளியே வாங்கி வரச்சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதற்கான மருந்து கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தொற்றுக்கான ஊசியும் கிடைக்கவில்லை.
தனி வார்டில் சிகிச்சை
இதையடுத்து பாதிப்பு தீவிரமாக பரவியதையடுத்து, இளைஞரை காப்பாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், தனியார் மருத்துவ குழுவினர் அவருக்கு கண், மூக்கு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் அவரது ஒரு கண் அகற்றப்பட்டது. இதையடுத்து தனி வார்டில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
செனனை, சேலம், மதுரையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 3 பேருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.